20 ஆண்டு கேரியர்
இந்திய அணியில் தான் இடம்பெற்றிருந்த 20 ஆண்டுகால கேரியரில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என பல்வேறு அவதாரங்களில் மிளிர்ந்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சிறப்பான கேம் பினிஷர் என்றும் கேப்டன் கூல் என்றும் ரசிகர்களால் மட்டுமின்றி சக வீரர்களாலும் போற்றப்பட்டவர்.
தோனி குறித்து கவுதம் கம்பீர்
முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழ் அதிகமாக விளையாடியுள்ள கவுதம் கம்பீர், தோனி தன்னுடைய அமைதியை இழந்து கோபப்பட்ட தருணங்கள் உண்டு என்ற ரகசியத்தை உடைத்துள்ளார்.
ரகசியத்தை வெளிப்படுத்திய கம்பீர்
தன்னுடைய அமைதியை தோனி எப்போதுமே எந்த தருணத்திலுமே விட்டதில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால் அவர் பொறுமையை இழந்து மற்றவர்களிடம் கோபப்பட்ட பல தருணங்களை தான் உடனிருந்து பார்த்திருக்கிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் ஷோவிற்காக பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவரும் மனிதர் தானே என்று குறிப்பிட்டுள்ள கம்பீர், அவர் கோப்பப்பட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேட்டை தூக்கி அடித்த தோனி
இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவில் தவறாக பீல்டிங் செய்யும் வீரர்கள் மற்றும் கேட்ச் தவறவிடுதல் போன்ற நேரங்களில் அவர் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவார் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இதனிடையே தோனி கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த சம்பவங்களும் உண்டு என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.