கொரோனா பரவல்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 4.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான இந்த போரில், உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய மக்களை பாதுகாக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. இதில் ஒன்று ஊரடங்கு. மக்கள் தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு போராட வேண்டியுள்ளது.
மத்திய அரசின் செயல்பாடு
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று நாடு தழுவிய ஊரடங்கு. இந்தியாவில் ஏறக்குறைய 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்துள்ளது மத்திய அரசு.
வீரர்கள் தவிப்பு
கொரோனாவால் அனைத்து துறைகளும் குறிப்பாக விளையாட்டுத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் தங்களது வீட்டில் பொழுதை போக்க கடுமையாக போராட வேண்டியுள்ளது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பிசியாக இருந்த அவர்கள், தற்போது செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
சமையலே கைகொடுக்கிறது
இந்த பிரச்சினையை தற்போதைய வீரர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் சந்தித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் சமயத்தில் தனக்கு சமையல், வீட்டு வேலைகளே பொழுதை போக்க கைகொடுப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் சமையல் செய்வதை தவிர்த்துவந்த தான் தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒற்றுமையாக வெற்றி கொள்வோம்
கொரோனா என்னும் போரை உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து வெற்றி கொள்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.,
கபில்தேவ் வேண்டுகோள்
சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை தற்போது மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். தங்களை குறிப்பாக கைகளை சுத்தமாக வைத்துகொள்வதன் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களை தவிர்ப்பதன் தேவை மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் தேவையும் தற்போது மக்களுக்கு புரிந்திருக்கும் என்றம் அவர் கூறியுள்ளார்.