டி20, ஒருநாள் தொடர்களில் மோதல்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் முடங்கியிருந்த ஆஸ்திரேலிய அணியினர், தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியினருடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடர்களில் மோதவுள்ளனர். இதையொட்டி நேற்று அவர்கள் இங்கிலாந்துக்கு தங்களது பயணத்தை துவக்கியுள்ளனர்.
செப். 11ல் ஒருநாள் தொடர் துவக்கம்
வரும் செப்டம்பர் 4ம் தேதி இரு அணிகளுக்கிடையில் டி20 தொடர் துவங்கவுள்ளது. இதையடுத்து 11ம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடர் துவங்கவுள்ளது. டி20 தொடர் சௌதாம்டனின் ரோஸ் பவுலிலும் ஒருநாள் போட்டிகள் மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரபோர்டிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய அணியினர் குவாரன்டைன் செய்யப்பட உள்ளனர்.
இங்கிலாந்து அணியினர் புறப்பட்டனர்
பயோ பபள் முறையில் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், 21 வீரர்களை கொண்ட குழுவினர் நேற்று இங்கிலாந்து சென்றடைந்தனர். இந்நிலையில், தன்னுடைய பயணத்திற்கு முன்பு சிட்னி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்கள் இன்றி விளையாடுவது வித்தியாசமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றம்
மைதானத்தில் தன்னை ஊக்குவிக்க ரசிகர்கள் இல்லாதது மிகப்பெரிய குறைதான் என்று தெரிவித்துள்ள ஸ்மித், ஆனால் அது தன்னுடைய உற்சாகத்தை குறைக்காமல் தான் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் டிவியில் ஏராளமான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்த ஸ்மித், இந்த தொடர் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் மோதல்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகளை 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் துவக்கியது. முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதி கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, அடுத்ததாக தற்போது பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், 3வதாக ஆஸ்திரேலியா அணியினருடன் வரும் 4ம் தேதி போட்டித் தொடர் துவங்கவுள்ளது.