கூலாக உள்ள தோனி
கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்பதே இந்திய கிரிக்கெட் உலகின் முக்கிய விவாதமாக உள்ளது. ஆனால் இதுகுறித்தெல்லாம் எதுவம் வாய் திறக்காமல் கர்மமே கண்ணாக தனது பணிகளை தொடர்ந்து வருகிறார் தோனி.
செப்டம்பர் 19ல் துவக்கம்
இந்நிலையில் யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் தோனி. இதற்கென ராஞ்சியில் அவர் தனது பயிற்சிகளை துவக்கியுள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து இதுவரை 3 கோப்பைகளை வென்று சாதித்துள்ள தோனி, இந்த முறை கோப்பையை வெல்வாரா, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா மற்றும் இதைகொண்டு சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்பாரா என்பது குறித்து தொடர் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.
2017ல் தோனி பேச்சு
இந்நிலையில், கடந்த 2017லேயே தோனி தன்னுடைய ரிடையர்மெண்ட் குறித்து தன்னிடம் பேசியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் திருமணத்தின்போது தாங்கள் இருவரும் இதுகுறித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பிட்டாக இருக்கும் வரையிலும், அணியின் வேகமான பௌலரை வெல்லும் வரையிலும் தான் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.
தோனி சிறப்பாக விளையாடுவார்
இந்த ஐபிஎல் 2020 போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்த மஞ்ச்ரேகர், இந்த தொடரில் நான்கைந்து சர்வதேச பௌலர்களே உள்ளதாகவும் அவர்களை எளிதாக தோனி எதிர்கொள்வார் என்றும் கூறினார். மேலும் தோனி ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வெற்றியாளராகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துபவராகவும் உள்ளதாக மஞ்ச்ரேகர் குறிப்பிட்டார்.