8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தின் சௌதாம்டனில் வரும் 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த போட்டியை உலக அளவில் அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
பந்துவீச சிறந்தவர் ஆண்டர்சன்
இந்நிலையில் பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள ஐசிசியின் உத்தரவும் இந்த போட்டியில் முதல்முறையாக பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் போட்டிக்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. இதனிடையே, எச்சில் இல்லாமல் பௌலிங் செய்ய முதல் பௌலராக ஜேம்ஸ் ஆண்டர்சனையே தான் தேர்ந்தெடுப்பேன் என்று முன்னாள் இங்கிலாந்து ஸ்பின்னர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
சிறந்த பௌலர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேன் என விராட் கோலியை பாராட்டியுள்ள பனேசர், அதேபோல சிறந்த பௌலர் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் என்றும் கூறியுள்ளார். மிகவும் திறமை மிக்க ஆண்டர்சன், எச்சில் பயன்படுத்தாமல் பந்து வீச சிறந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். அவரால் இந்த பந்தை பௌலிங் செய்ய முடியவில்லை என்றால் மற்ற வீரர்களுக்கும் மிகவும் சிரமம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இசிபிக்கு பாராட்டு
சர்வதேச அளவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்கியுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள பனேசர், இந்த தொடர் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இசிபியிடம் ஆலோசனை கேட்டு மற்ற கிரிக்கெட் வாரியங்களும் தங்களது நாடுகளில் போட்டிகளை விரைவில் துவங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.