இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல்லின் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். அவரின் கீழ், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். அவர்களையும் இளம் வீரர்களையும் சமாளித்து அணியை வழிநடத்தி வருகிறார் அவர். சிறப்பான பயிற்சிகளை அணி வீரர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்.
சிறப்பு செஷன்கள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மிகுந்த பாதுகாப்புடன் அணி வீரர்கள் இருந்தாலும் அவர்களிடம் அச்சம் என்பது இல்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 6 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட குவாரன்டைனில் ஆன்லைன் செஷன்கள் நடத்தப்பட்டதாகவும், மேஜிக் கலைஞரை கொண்டு அணி வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீரர்களிடம் ஒரே மாதிரியான மரியாதை
மேலும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ள அவர், அணியில் மூத்த வீரர்கள் உள்ள நிலையில், அவர்களிடம் எவ்வாறு பழகி அவர்களின் அனுபவங்களை அணிக்காக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அணியில் அனைவரிடமும் ஒரே மாதிரியான மரியாதையுடன் பழகுவதாகவும் கூறியுள்ளார்.
திறமைகளை கண்டுணர்கிறேன்
மேலும் அணியில் யாருடைய திறமைகளையும் மதிப்பிடுவதில்லை என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் அனுபவங்களையும் திறமைகளையும் கண்டுணர்ந்து அதை தன்னுடைய பேட்டிங்கில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.