120 ரன்களில் சுருண்ட பஞ்சாப்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 14வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 120 ரன்களில் சுருண்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியிடம் தீவிரமான போட்டியை இன்றைய தினம் காண முடிந்தது.
வெற்றிக்கான தீவிரம்
இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்று ஓடியது. இந்நிலையில் அணியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான மாற்றங்களும் மீண்டும் வெற்றி முகம் காட்டும்வகையில் திரும்பி வந்துள்ளது. அதை இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காண முடிந்தது.
ரஷீத் கான் பௌலிங்கில் அவுட்
முன்னதாக மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் பஞ்சாப் அணியில் சில வீரர்கள் ஓரளவுக்கு விளையாடி அணியின் ஸ்கோர் 100ஐ தாண்ட உதவினர். அதில் யூனிவர்சல் கிங் என்று கூறப்படும் கிறிஸ் கெயிலும் ஒருவர். அவர் இன்றைய போட்டியில் 15 ரன்களை அடித்து ரஷீத் கான் பௌலிங்கில் அவுட்டானார்.
கெயில் உற்சாகம்
இந்த ஐபிஎல்லில் அதிக வயதுடைய வீரராக உள்ள கிறிஸ் கெயில், தன்னுடைய டேங்கில் இன்னும் எராளமான சரக்குகள் உள்ளதாக உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் மேலும் அதிக கிரிக்கெட் போட்டிகளை விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் சென்னையின் வெப்பத்தை மட்டும் சமாளித்துவிட்டால், எதிரணி இளைஞர்களையும் சமாளித்து விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாசிட்டிவ்வாக அணுக வேண்டும்
இன்றைய போட்டியில் கிறிஸ் கெயிலின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ரஷீத் கான். இந்நிலையில் ரஷீத் உலகதர பௌலர் என்றும் சென்னை கண்டீஷன்ஸ் அவருக்கு சிறப்பாக பொருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். அவரை பாசிட்டிவாக அணுக வேண்டும் என்றும் கெயில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிட்ச்சிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி புதியது என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு அதை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.