சன்ரைசர்ஸ் அபாரம்
ஐபிஎல்லின் 47வது போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி அபாரமாக விளையாடி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை அடித்தது.
பார்ட்னர்ஷிப்பில் 107 ரன்கள்
அணியின் டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட் இழப்பிற்கு முன்னதாகவே பார்ட்னர்ஷிப்பில் 107 ரன்களை அடித்து அதகளம் செய்தனர். இருவரும் அடித்த சிக்ஸ்களும் பவுண்டரிகளும் மைதானத்தை பரபரக்க செய்தன.
பொறுப்பை எடுத்து கொண்ட வார்னர்
தொடர்ந்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 131 ரன்களிலேயே சுருண்டது. இந்நிலையில், டாப் ஆர்டரில் களமிறங்கி தானும் அதிக பொறுப்பை எடுத்து கொண்டதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த பொறுப்பை பௌலர்களிம் விட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான முடிவு
இந்த போட்டியில் பேர்ஸ்டோவிற்கு பதிலாக சாஹா களமிறக்கப்பட்டது மிகவும் கடுமையான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது ஆட்டம் நம்ப முடியாததாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதேபோல 4 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத்தின் பௌலிங்கும் நம்ப முடியாததாக இருந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.