அறிமுகம்
இஷாந்த் சர்மா இளம் வயதிலேயே இந்திய அணியில் அறிமுகம் ஆனார். வேகப் பந்துவீச்சாளரான அவர் துவக்கத்தில் அணியில் நிரந்தர வீரராக இடம் பெறவில்லை. முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்சியில் தான் அதிக காலம் ஆடினார் இஷாந்த் சர்மா.
விலகி இருந்தார்
துவக்கத்தில் தோனி கேப்டன் என்பதால் விலகியே இருந்துள்ளார். அதிகமாக தோனியுடன் பேசாமல் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின்னரே தோனியிடம் சகஜமாக பேசி பழகி உள்ளார். அப்போது தான் அவரின் கனிவான குணத்தை புரிந்து கொண்டுள்ளார்.
அவரை புரிந்து கொண்டேன்
இது பற்றி இஷாந்த் சர்மா கூறுகையில், "துவக்கத்தில் தோனியுடன் குறைவாகவே பேசி வந்தேன். ஆனால், 2013க்குப் பிறகு அவருடன் தான் பேசத் துவங்கினேன். அவரை புரிந்து கொண்டேன்" என குறிப்பிட்டார். பின்னர் தோனி இளம் வீரர்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது பற்றி கூறினார்.
கனிவானவர்
"அதன் பின் தான் அவர் எத்தனை கனிவானவர், இளம் வீரர்களிடம் நல்ல விதமாக பேசி, அவர்களை நன்றாக நடத்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவர் களத்திலும் அதே போலவே நடந்து கொள்வார். அவர் தன் அறைக்கு யாரும் வரக் கூடாது என எப்போதுமே சொன்னதே கிடையாது" என்றார் இஷாந்த் சர்மா.
ஷமியிடம் கேட்கலாம்
மேலும், "இது பற்றி நீங்கள் ஷமியிடம் கேட்கலாம். அவர்தான் தோனி அறைக்கு அடிக்கடி செல்வார். தோனி எப்போதுமே இப்படித் தான். அவருடன் மகிழ்ச்சியாக இருப்பது வேறு மாதிரியான தருணம். அவரிடம் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக் கொள்ளலாம்" எனவும் கூறினார் இஷாந்த் சர்மா.
டெஸ்ட் அணியில் இஷாந்த்
இஷாந்த் சர்மா 2016இல் தான் தன் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி இருந்தார். 2013க்கு பின் ஒரு டி20 போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. எனினும், இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரராக தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் இஷாந்த் சர்மா.
டெஸ்ட் தொடர்
இந்தியா வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என கூறப்படும் நிலையில், இஷாந்த் சர்மா அதற்காக தன்னை தயார் செய்து வருகிறார். லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தன் பயிற்சியை துவக்கி உள்ளார்.