என்னை விராட் கோலியுடன் ஒப்பிடாதீங்க
ஆனால் தன்னை அடுத்த விராட் கோலி என்று வர்ணிப்பதை ஹைதர் அலி விரும்பவில்லை. என்னை அப்படி அழைக்காதீர்கள் என்றும் அடுத்த பாபர் அசாம்னு என்னை கூப்பிடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். இதுதொடர்பாக ஒரு யூடியூப் வீடியோவில் ஹைதர் அலி பேசுகையில், "எனக்கு பாபர் அசாமின் ஸ்டிரோக் பிளே ரொம்பப் பிடிக்கும். அது என்னைக் கவர்ந்துள்ளது. அவரிடமிருந்து நிறைய கற்க விரும்புகிறேன். அவரது வழியில் நடக்கவும் விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹைதர் அலியின் கனவு இதுதான்
உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். எந்த ஒரு வீரருமே அவர்களுடைய ரோல் மாடல் போல மாற முடியாது. ஆனால் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதேபோலத்தான் நானும் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். என்னை அடுத்த விராட் கோலி என்று சொல்கிறார்கள். அப்படி சொல்வதை விட அடுத்த பாபர் அசாம்னு சொல்வதையே நான் விரும்புகிறேன். காரணம் கோலியை விட பாபர் அசாம் நன்றாக ஷாட் ஆடக் கூடியவர் என்று ஹைதர் அலி கூறியுள்ளார்.
நிச்சயம் நான் கோலியாக முடியாது
நான் நிச்சயம் கோலியாக முடியாது. ஆனால் அவரைப் போல ஷாட் ஆடும் பக்குவத்தை எனக்குள் கொண்டு வர முடியும். அதற்கு நிறைய பிராக்டிஸ் தேவை. நான் ஹைதர் அலி. ஹைதர் அலியாகவே இருக்க விரும்புகிறேன். ஹைதர் அலியாகத்தான் நான் இருக்க முடியும். நான் பாபர் அசாமை முதல் தர போட்டியில் சந்தித்தேன். அப்போது எனக்கு அவர் நிறைய பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். மேலும் லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம் என்றும் அந்த யூடியூபில் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
ஊக்கமளித்தார் பாபர் அசாம்
பிஎஸ்எல் தொடரின்போது கூட அவர் எனக்கு நிறைய உதவினார். நிறைய நம்பிக்கை கொடுத்தார். நிறைய ஆலோசனை கொடுத்தார். ரன்கள் குவிப்பது குறித்து நிறைய ஊக்கமளித்தார். அடுத்து அல்லாவிடம் எல்லாவற்றையும் நான் கொடுத்து விட்டேன். இனி அல்லா பார்த்துக்குவார் என்றார் 19 வயதேயான இந்த இளம் பேட்ஸ்மேன்.
ஹைதர் அலி மேம்பட்டால் நல்லது
சமீபத்தில்தான் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா ஒரு பேட்டியின்போது ஹைதர் அலி தனது திறமையை மேம்படுத்திக் கொண்டால் அடுத்த கோலியாகலாம் அல்லது அடுத்த பாபர் அசாமாக மாறலாம் என்று கூறியிருந்தார். காரணம் கோலியும் சரி, பாபர் அசாமும் சரி தங்களது திறமையை மேலும் மேம்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர். அந்தத் தவறை ஹைதர் அலி செய்யக் கூடாது என்று அவர் கூறியிருந்தார். அதற்குப் பதிலாகவே இப்போதைய ஹைதர் அலியின் பேட்டி பார்க்கப்பட வேண்டியுள்ளது.
டி 20 உலகக் கோப்பையில் ஆட ஆசை
தற்போது பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து ஆட ஆர்வமாக இருக்கிறார் ஹைதர் அலி. குறிப்பாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆட ஆர்வமாக காத்திருக்கிறாராம். தேர்வாளர்களும், பயிற்சியாளர்களும் அதற்கு மனது வைக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே எனது எதிர்காலம் உள்ளது. ஆனால் நான் எப்போது கூப்பிட்டாலும் ஓடி வந்து ஆடத் தயார் என்றும் ஹைதர் ஆலி ஆர்வத்துடன் சொல்கிறார்.