3வது போட்டி
கடந்த ஆஸ்திரேலிய தொடரின் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவி அஸ்வின், ரிஷப் பந்த் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்தனர். தொடரின் வெற்றிக்கு இந்த போட்டி முக்கிய காரணமாக அமைந்தது.
அறுவை சிகிச்சை
முன்னதாக அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. முன்னதாக போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் விளையாட தயாராக இருந்தார்.
விளையாட தயாராக ஜடேஜா
அந்த போட்டியில் விளையாடுவதற்காக பேட் எல்லாம் போட்டுக் கொண்டு தான் தயாராக இருந்ததாகவும் வலி நிவாரண ஊசிகளை போட்டுக் கொண்டதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். மேலும் போட்டியில் 15 ஓவர்களை விளையாடுவதற்கு தான் திட்டமிட்டதாகவும் அனைத்து ஷாட்களையும் விளையாட தயாராக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வலியை பொருட்படுத்தவில்லை
ஆனால் அந்த வலியுடன் அனைத்து பந்துகளையும் எதிர்கொள்வது சுலபமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் அணியின் வெற்றிக்காக தான் வலியை பொருட்படுத்தாமல் விளையாட தயாராக இருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த போட்டியில் ஜடேஜா விளையாடுவதற்கான தேவை ஏற்படவில்லை.
கடுமையான வலி
முன்னதாக முதல் இன்னிங்சில் தன்னுடைய விரலில் பந்து பட்டவுடன் கடுமையான வலி இருந்ததாகவும் ஆனால், அதை தான் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஜடேஜா, அந்த போட்டியில் ரன்களை குவிப்பதை மட்டுமே தான் கருத்தில் கொண்டதாகவும் கூறியுள்ளார். போட்டியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் மூலமாகவே தனக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.