என்ன சொன்னார்
இதுகுறித்து யுவராஜ் சிங் அளித்த பேட்டியில், இது மிகவும் கஷ்டமான அதே சமயம் அழகான விஷயம். என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. 25 வருடங்கள் கழிந்துவிட்டது. நான் இப்போது இதை விட்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்தான் எனக்கு எல்லாம் கொடுத்தது. அதனால்தான் நான் இங்கே நிற்கிறேன்.
கிரிக்கெட்டை காதலித்தேன்
நான் கிரிக்கெட்டை அதிகம் காதலித்தேன். ஒரு துளி கூட இதை வெறுத்தது இல்லை. இது தான் என்னை மண்ணில் விழ கற்றுக்கொடுத்தது. இதுதான் என்னை மீண்டும் எழவும் கற்றுக்கொடுத்தது. நான் வெற்றியை விட அதிகமாக தோல்விதான் அடைந்து இருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட விட்டுக்கொடுத்தது இல்லை. கிரிக்கெட்டுக்கு நான் உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தேன்.
அப்பாவின் கனவு
நான் என் அப்பாவின் கனவை நிறைவேற்றவே கிரிக்கெட் உலகிற்கு வந்தேன். அப்பாவின் கனவையும் நிறைவேற்றினேன். அது எனக்கு பெரிய மகிழ்ச்சி. என் ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு மிக்க நன்றி. என் வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றேன். ஆனால் சில நாட்களில் கேன்சரால் தாக்கப்பட்டேன்.
மேகம்
ஒருநாள் மேகத்தை தொட்டுவிட்டு உடனே பாதாளத்தில் விழுவது போல எல்லாம் மாறியது. நான் நல்ல பார்மில் இருக்கும் போதுதான் இது நடந்தது. ஆனால் எனக்கு உறுதுணையாக பலர் இருந்தனர். மருத்துவர்கள் பெரிய அளவில் உதவினார்கள். இதுதான் கேன்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனக்கு சக்தி கொடுத்தது. நான் அந்த சம்பவத்தில் இருந்து கேன்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறேன்.
சந்தோசம்
நான் இத்தனை போட்டிகளை இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை. 6 சிக்ஸ் அடித்தது. 2011 உலகக் கோப்பை விளையாடியது. இலங்கைக்கு எதிராக மோசமாக ஆடி 21 பந்தில் 11 ரன்கள் எடுத்தது என்று நிறைய நடந்துள்ளது. அப்போதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்தது. ஆனாலும் நான் கிரிக்கெட் மீது அளவு கடந்த காதல் கொண்டு இருந்தேன்.
நான்தான் எப்போதும்
இதனால் மீண்டும் கடுமையான பயிற்சி எடுத்து மீண்டும் அணிக்கு வந்தேன். மீண்டும் 3 வருடம் கழித்து இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பினேன். எல்லாரும் முடியாது என்று கூறிய போது நான் சாதித்தேன். நான் எப்போதும் உடைந்து போனதே இல்லை, என்று யுவராஜ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.