மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்
பார்படாசில் பிறந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ரோலண்ட் பட்சர், தன்னுடைய குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தன்னுடைய 14வது வயதில் குடியேறினார். அந்த காலத்தில் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி இருந்த நிலையில், கிரிக்கெட்டை கனவாக கொண்டு தன்னுடைய இளம் வயது முதலே வாழ்ந்தவர் ரோலண்ட் பட்சர்.
முதல் கருப்பின கிரிக்கெட் வீரர்
இந்நிலையில் கடந்த 1974ல் மிடில்செக்ஸ் அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய ரோலண்ட் பட்சர், தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றார். இங்கிலாந்து அணிக்காக முதன்முதலில் விளையாடிய முதல் கருப்பின கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் இதன்மூலம் இவருக்கு கிடைத்தது.
வெற்றிக்கு காரணமான பட்சர்
இதையடுத்து 1980ல் தனது முதல் ஒருநாள் போட்டி வாய்ப்பை பெற்ற இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது போட்டியில் 38 பந்துகளில் 52 ரன்களை அடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். அடுத்த ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
மறைமுக தாக்குதல்
இந்நிலையில் தன்னுடைய ஆட்டக் காலத்தில் தானும் இனவெறி தாக்குதலை சந்தித்துள்ளதாக ரோலண்ட் பட்சர் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட்டில் பெரிய சாதனைகளை செய்துவந்த நிலையில், இங்கிலாந்தின் கிளப் அணியிலும் அதிகமான கறுப்பின கிரிக்கெட் வீரர்கள் இருந்ததாக கூறியுள்ளார் பட்சர். ஆனால் தான் இனவெறி தாக்குதலை நேரிடையாக சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
இனவெறி தாக்குதல் இருந்தது
மிடில்செக்ஸ் அணியிலும் இங்கிலாந்து அணியிலும் தான் விளையாடியபோது மறைமுகமாக தன்னை பற்றி ரசிகர்கள் பேசுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளியில் படிக்கும்போதும் தான் இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், ஆனால் அதுகுறித்தெல்லாம் அப்போது தெரியாது என்றும் பட்சர் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்திலும், கிரிக்கெட்டிலும் இனவெறி தாக்குதல்கள் இருந்தது மறுப்பதற்கில்லை என்றும் கூறினார்.