அன்டர் -19 உலக கோப்பை
கடந்த ஆண்டில் நடைபெற்ற அன்டர் -19 உலக கோப்பை தொடரின்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் பிரியம் கர்க். அந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் வெற்றியை சுவைத்த இந்திய அன்டர் -19 அணி வங்க தேசத்திற்கெதிரான இறுதிப்போட்டியில் கோப்பையை கைநழுவ விட்டது.
தோனியிடம் பாடம்
மழை குறுக்கீடு போன்றவற்றால் இந்த கோப்பை கைநழுவியது என்றாலும், தன்னுடைய நிதானத்தை கைவிடவில்லை பிரியம் கர்க். தன்னுடைய அணி வீரர்களிடம் சென்று, தலையை நிமிர்த்திக் கொள்ளுங்கள், நீங்கள்தான் பெஸ்ட் என்று கூறினார். இதனிடையே, பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் குணங்களை தான் தோனியை பார்த்துதான் கற்றுக் கொண்டதாக கர்க் பெருமையுடன் கூறுகிறார். இந்த வயதிலும் ரன்களை சேஸ் செய்யும் தோனியின் பிட்னஸ் தன்னை கவர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தோனியை சந்திக்காத கர்க்
தோனியின் அதிகமான வீடியோக்களை வைத்து, அதை போட்டு பார்த்து, அவரது செயல்பாடுகளை தன்னில் ஏற்றிக் கொள்வதாகவும், அவரது நிதானத்தை கடைபிடிக்க தானும் கற்றுக் கொள்வதாகவும் கர்க் மேலும் கூறியுள்ளார். 19 வயதான கர்க், இதுவரை தோனியை சந்தித்ததில்லை என்றாலும் தோனியின் வீடியோக்கள் மூலம் தான் உத்வேகம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடம் கற்றுக்கொண்ட கர்க்
கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான 113 நாட்-அவுட் ஆட்டம், 2015ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 92 நாட்-அவுட் ஆட்டம், 2009ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 124 ரன்கள் எடுத்த ஆட்டம் போன்ற பல்வேறு தோனி குறித்த வீடியோக்கள் தன்னை மிகவும் கவர்ந்தவை என்று பட்டியலிடுகிறார் பிரியம் கர்க். இந்த வீடியோக்களின்மூலம் நெருக்கடி நேரங்களில் இந்தியாவை தூக்கி நிறுத்தும் தோனியின் ஆட்டங்களை தான் கண்டு பாடம் கற்றதாக கர்க் கூறியுள்ளார்.