மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதால் தாம் இழக்கப் போவது நிறைய வழிகாட்டுதல்களைத்தான் என்று இந்திய அணி வீரர் இர்ஃபான் பதான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் தமது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் சச்சின் டெண்டுல்கர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த இர்ஃபான் பதான், 9 ஆண்டுகாலம் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடி வருகிறேன். நான் விளையாட தொடங்கிய காலத்தில் அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.
நான் ஒவ்வொருமுறையும் பந்து வீசும்போதும் அந்த பந்தை எவ்வளவு தூரத்தில் வீச வேண்டும் என்பதையும் டெண்டுல்கரே சொல்லித் தருவார்.. அவரிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். பந்து வீச்சு முறையைக் கூட அவரிடம் இருந்தே கற்றேன். அவர் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமானவர்.
அவர் ஓய்வு பெறுவதால் நான் இதுவரை பெற்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் எதிர்காலத்தில் பெற முடியாமல் போய்விடும். 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது மிகப் பெரும் சாதனை. அவருக்கு மிகச் சிறப்பான பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்றார்.