எச்சில் பயன்பாட்டிற்கு தடை
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கியுள்ள நிலையில், முடங்கியுள்ள கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவங்கும் நோக்கத்தில் ஐசிசி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி குழு பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை செய்தது.
பரிந்துரைகளை உறுதி செய்தது
இந்நிலையில் ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கிரிக்கெட் கமிட்டி குழுவின் பரிந்துரைகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு, அதை கட்டுப்படுத்தும்வகையில் இத்தகைய பரிந்துரைகள் தற்போது உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஆர்எஸ் ஆய்விற்கு பரிந்துரை
சர்வதேச அளவில் பயணங்களை மேற்கொள்ள பல்வேறு தடைகள் காணப்படும் நிலையில், சர்வதேச போட்டிகளில் உள்ளூர் அம்பயர்களை பணியில் அமர்த்தும் பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனுபவம் குறைவாக இருக்கும் என்பதால் டிஆர்எஸ் ஆய்விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரிந்துரைகளை அமல்படுத்துவதன்மூலம் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பௌலர்களுக்கு 5 ரன்கள் பெனால்ட்டி
எச்சில் பயன்படுத்த வீரர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள ஐசிசி, இவ்வாறு பயன்படுத்தினால் ஆரம்பத்தில் அம்பயர்கள் எச்சரிக்கை விடுக்கலாம் என்றும் தொடர்ந்து பயன்படுத்தும்போது பேட்டிங்கில் 5 ரன்கள் பெனால்ட்டி விதிக்கப்பட வேண்டும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. ஒரு போட்டியில் விளையாடும் அணிக்கு இரண்டு முறை இவ்வாறு எச்சரிக்கை விடப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வீரர்களை மாற்ற அனுமதி
இவ்வாறு எச்சிலை தவறி பயன்படுத்தும் நிலையில் அதை சுத்தம் செய்யவும் அம்பயர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் இடையில் வீரர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை மாற்றவும் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல தற்போதைய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்வகையில் டெஸ்ட் போட்டிகளிலும் ஜெர்சியில் 32 இன்ச் அளவிலான லோகோவிற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் ஐசிசி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.