ஐசிசி ஒத்திவைப்பு
இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் துவங்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இதை நடத்த சாத்தியப்படாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்ததையடுத்து தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஐசிசியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கால அட்டவணையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தியா நடத்தவுள்ளது
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையை இந்தியா நடத்தவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரை தங்களுக்கு மாற்றித் தரவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. தள்ளிவைக்கப்பட்டுள்ள தங்களது தொடருக்கு ஏற்கனவே டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகள் அதை தள்ளி வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிசிசிஐ, சிஏ போட்டி
ஆனால் தன்னுடைய டி20 உலக கோப்பையை நடத்தும் உரிமையை இந்தியாவும் விட்டுத்தர விருப்பப்படவில்லை. 2022ல் டி20 உலக கோப்பையை நடத்தினால், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராவது மிகவும் சிரமமாக இருக்கும் என்பது பிசிசிஐயின் நிலைப்பாடு.
பிசிசிஐ, சிஏ பங்கேற்பு
இந்நிலையில், டி20 உலக கோப்பை உள்ளிட்ட ஐசிசி தொடர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஐசிசி போர்ட் மீட்டிங் இன்று கூடவுள்ளது. இதில் பிசிசிஐ சார்பில் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா பங்கேற்கவுள்ளனர். இதேபோல சிஏ சார்பில் இயர்ல் எட்டிங்ஸ் மற்றும் நிக்கி ஹாக்லி பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் ஆலோசிக்கப்பட உள்ளது.