புதிய குழுவின் வேலைகள்
ஐசிசி, "தொடர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் குழு" என்ற பெயரில் புதிய குழு ஒன்றை அமைத்து, உலகம் முழுவதும் நடைபெறும் தனியார் டி20 தொடர்களை கட்டுப்படுத்துவது, இந்த தொடர்களுக்கு என ஒழுங்குபடுத்தப்பட்ட, சீரான கொள்கைகள் வகுப்பது, தொடர்கள் மற்றும் வீரர்கள் குறித்த கொள்கை குறித்து அறிவுறுத்துவது, டி20 தொடர்கள் நடத்தும் கிரிக்கெட் போர்டுகளில் கொள்கை உருவாக்கும் இடத்தில் இருப்பது என பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்து வருகிறது.
சரியா வருமா?
ஆனால், இது மற்ற சிறிய டி20 தொடர்களுக்கு பயனளிக்கும் முறையாக இருந்தாலும், ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட தொடருக்கு சரியாக வராது என பிசிசிஐ இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிசிசிஐ எதிர்ப்பு
பிசிசிஐ இந்த விஷயத்தில் கூறுவது இது தான் - "ஐபிஎல் என்பது இந்தியாவின் உள்ளூர் தொடர். ஐசிசி, எப்படி ரஞ்சி தொடர் போன்ற உள்ளூர் தொடரில் எந்த தலையீடும் செய்ய முடியாதோ, அதே போல ஐபிஎல் தொடரிலும் எந்த அறிவுறுத்தல்களும் கூற முடியாது" என கூறி உள்ளது.
பிசிசிஐ பலவீனம்
எனினும், பிசிசிஐயால் இந்த அழுத்தத்தை நீண்ட காலம் கொடுக்க முடியாது என கூறப்படுகிறது. அதற்கு காரணம் பிசிசிஐ தற்போது உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட குழுவால் இயங்கி வருகிறது. பிசிசிஐ அதிகாரிகள் யாருக்கும் எந்த சக்தியும் இல்லை.
ஐபிஎல்-க்கு பாதிப்பு
எனவே, இந்த நேரத்தில் ஐசிசி, ஐபிஎல் தொடரில் தலையிட முடிவு செய்தால் அதை எதிர்த்து ஒரு முடிவுக்கு வர பிசிசிஐ-க்கு கால தாமதம் ஏற்படும். அது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் தொடருக்கு பாதிப்பாகவே அமையும்.
ஏன் இந்த முடிவு?
சரி, ஐசிசி, ஐபிஎல் தொடரில் மட்டுமா மூக்கை நுழைக்கிறது? உலகம் முழுவதிலும் உள்ள டி20 தொடர்களிலும் தானே நுழைய திட்டமிடுகிறது. அவர்களும் எதிர்ப்பார்களே! அது நடக்காது என்கிறார்கள். ஏன் தெரியுமா?
ஐசிசி வருமானம் குறைவு
ஐபிஎல் தொடர் நடக்கும் இரண்டு மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை ஐசிசியால் ஒரு ஆண்டில் கூட சம்பாதிக்க முடியாது என்பதே உண்மை. ஒருவேளை ஐசிசி ஐபிஎல் தொடரின் கொள்கைகளில் நுழைந்தால், அடுத்து வருமானத்திலும் கை வைக்கும் என்கிறார்கள்.
சிறிய சிக்கல்
அதே சமயம், மற்ற நாட்டு டி20 தொடர்களில் லாபம் உண்டு என்றாலும், ஐபிஎல் அளவுக்கு சம்பாதிக்க முடியாது. மேலும், அவர்கள் தொடர் நடக்கும் போது உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும். அதனால், வீரர்கள் அந்த தொடர்களில் ஆட முடியாத நிலை ஏற்படும்.
ஏற்றத்தாழ்வு
ஆனால், ஐபிஎல் தொடர் நடக்கும் போது கிட்டதட்ட பெரிய கிரிக்கெட் தொடர்கள் எதுவுமே நடைபெறாது. அனைத்து நாடுகளின் முன்னணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டு இருப்பார்கள். இந்த ஏற்றத்தாழ்வை சீர் செய்யும் என்பதால் ஐசிசி-யின் இந்த புதிய முடிவை மற்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் ஆதரிக்க வாய்ப்புள்ளது.