இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடருக்காக சர்வதேச அளவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தொடர்ந்து போட்டியிட்ட நிலையில் நியூசிலாந்து முதலில் இறுதிப்போட்டிக்கு தேர்வானது. தொடர்ந்து கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றி மூலம் இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தேர்வானது.
பிரிட்டனில் இறுதிப்போட்டி
இதையடுத்து தற்போது ஜூன் 18 முதல் 22ம் தேதிவரை சௌதாம்ப்டனின் ஹாம்ப்ஷயர் பௌலில் இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளாக 23ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் இந்த இறுதிப்போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
ரெட் லிஸ்ட்டில் இந்தியா
இந்நிலையில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் விதித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து காணப்படும் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய ரெட் லிஸ்டில் இந்தியாவை பிரிட்டன் வைத்துள்ளது.
பிரிட்டனில் நுழைய அனுமதி மறுப்பு
இதையடுத்து பிரிட்டன் மற்றும் ஐரீஷ் குடியிருப்புவாசிகள் மற்றும் பிரிட்டீஷ் சிட்டிசன்கள் இல்லாதவர்கள் கடந்த 10 நாட்களாக இந்தியாவில் இருந்தால் அவர்கள் பிரிட்டனில் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி திட்டவட்டம்
இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பிரிட்டனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ரெட் லிஸ்டில் உள்ள இந்தியாவின் வீரர்கள் பிரிட்டனில் நுழைவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பிரிட்டன் அரசுடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இறுதிப்போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.