ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கி 22ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ரிசர்வ் நாளாக 23ம் தேதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரின் அறிமுக இறுதிப்போட்டியாக இந்த போட்டி நடைபெறவுள்ளதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்கொண்டுள்ளனர்.
சௌதாம்டனுக்கு மாற்றம்
டெஸ்ட் தொடர்களில் வலிமையாக உள்ள இந்திய அணி இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வெற்றி கொண்டு வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி தற்போது சௌதாம்ப்டனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நேற்றைய தினம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது ஐசிசியும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சௌதாம்ப்டனில் உலகதரத்தில் போட்டி மற்றும் பயிற்சிக்கான வசதிகள் உள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
வீரர்களுக்கு பாதுகாப்பு
சௌதாம்டனில் கொரோனா தாக்கம் இல்லாமல் பாதுகாப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களை சிறப்பாக நடத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பான முறையில் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களையும் போட்டியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.