கொல்கத்தா: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கைவிடப்படுகின்றன. 2021ல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட சாம்பியன் கோப்பை போட்டியில் இருந்து அவை இனி உலக டி-20 போட்டிகளாக நடத்துவது என்று ஐசிசி முடிவு செய்துள்ளது.
ஐசிசி செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 104 நாடுகளின் மகளிர் மற்றும் ஆடவர் டி-20 அணிகள் பங்கேற்றும் ஆட்டங்களுக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 1998 முதல் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டித் தொடரை கைவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை இந்தியாவில் 2021ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் போட்டியில் இருந்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் உலக டி-20 போட்டியாக மாற்றப்படுகிறது. அதன்படி 16 அணிகள் இந்தப் போட்டியில் விளையாடும்.
அதன்படி பார்த்தால், 2020ல் ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டி நடக்கும். அதன் பிறகு, 2021ல் இந்தியாவில் உலக டி-20 போட்டி நடக்கும்.
டி-20 போட்டிகள் மிகவும் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது.