இந்திய அணி போட்டிகள்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 17ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவிருக்கிறது. சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்பிரிவின் முதல் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.
பார்வையாளர்கள்
இந்நிலையில் இந்த உற்சாகத்தை இன்னும் அதிகரித்துள்ளது ஐசிசி. அதாவது கடந்த சில தினங்களாக டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அதற்கு ஐபிஎல் தொடரை முன் உதாரணமாக வைத்துக்கொள்ளப்பட்டது. ஐபிஎல் தொடரில் தற்போது ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐசிசி-ன் அறிவிப்பு
இது வெற்றிகரமாக உள்ளதால் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல்-ஐ போன்று குறைவாக இல்லாமல் நிச்சயம் 70% வரை ரசிகர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி உறுதியளித்துள்ளது. ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்குண்டான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.
ரசிகர்களின் ஏக்கம்
கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு ஐசிசி கோப்பைகளையும் வெல்லாமல் இருக்கும் இந்திய அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.