ஐசிசி சந்திக்கும் சர்ச்சைகள்
ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் ஒவ்வொரு ஆண்டும் புதுப் புது சர்ச்சைகள் எழுந்துக்கொண்டே தான் இருக்கின்றன. கடைசியாக நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியி இங்கிலாந்து - நியூசிலாந்து சர்ச்சை. அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையின் குறுக்கீட்டால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது.
2 வசதிகள் அறிமுகம்
இந்நிலையில் இந்தாண்டு மழை, விக்கெட்கள் பிரச்னை என எதுவுமே இருக்கக்கூடாது என ஐசிசி அமைப்பு இரண்டு முக்கிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதில் முதல் விஷயமாக டிஆர்எஸ் எனப்படும் Decision review system அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐசிசி- எந்தவொரு டி20 தொடரிலும் டிஆர்எஸ் விதிமுறை கொண்டு வரப்படவில்லை. இனி கொண்டு வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
எத்தனை டிஆர்எஸ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கள நடுவர்வகளின் டி20 உலகக்கோப்பையில் பணியாற்றுவது குறையலாம். அவர்களுக்கு மாற்றாக அனுபவம் குறைந்த நடுவர்களையே நியமிக்க வேண்டியிருப்பதால் சரியான முடிவுகளை எடுப்பதற்காக வீரர்களுக்கு டி.ஆர்.எஸ் முறை கொடுக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு அணியும் பேட்டிங்கிற்கு 2 ரிவ்யூஸ் மற்றும் பவுலிங்கிற்கு 2 ரிவ்யூஸ் எடுத்துக்கொள்ளலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
மழையின் குறுக்கீடு
இது ஒருபுறம் இருக்க மழை குறுக்கீடு செய்தால் என்ன நடைமுறை இருக்கும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. மழையின் குறுக்கீடு இருந்தால் வழக்கமாக டக்லஸ் லீவிஸ் முறை பின்பற்ற முடியும். டி20 உலகக்கோப்பையில் இந்த முறை பின்பற்றபட வேண்டும் என்றால் பேட்டிங் செய்யும் அணி குறைந்தது 5 ஓவர்களாவது விளையாடியிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. நாக் அவுட் மற்றும் இறுதிப்போட்டிக்கு இது 10 ஓவர்களாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.