புத்துயிர் பெற்ற ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்தாண்டே நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தற்போது நடைபெற்று முடிந்தது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் நடைபெற்ற இந்த போட்டிகள் உலக நாடுகளிடையே தனி கவனத்தை பெற்றது. உலகின் விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் தொடருக்கு கடந்த சில வருடங்களாக மவுசு குறைந்துக்கொண்டே சென்றது. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் அதனையெல்லாம் சரி செய்துள்ளது. விறுவிறுப்பான போட்டிகளால் மீண்டும் ஒலிம்பிக் மீதான ஆர்வம் உலக மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் இணைப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டையும் ஒலிம்பிக்கில் சேர்க்கக்கோரி ரசிகர்கள் அவ்வபோது கோரிக்கைகளை வைத்து வந்தனர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கின் தாக்கத்தால் அது மேலும் சூடு பிடித்துள்ளது.
ஐசிசியின் அறிவிப்பு
அதற்கு நடவடிக்கையும் வகையில் ஐசிசி இன்று ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி, வரும் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை இணைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐசிசி தலைவர் க்ரேக் பார்க்ளே, கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒலிம்பிக் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். நம் கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் ஒன்றியுள்ளது.
ரசிகர்களின் கோரிக்கை
உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அதில் 90% பேர் கிரிக்கெட்டை ஒலிம்பிக் தொடரிலும் பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் தான் கிரிக்கெட்டிற்கு 92% ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்களின் ஆசைக்காக இதை செய்யவிருக்கிறோம். இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கை கிரிக்கெட்டை இணைப்பதற்கு அமெரிக்காவில் உள்ள 30 லட்ச கிரிக்கெட் ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்.
அதிகப்படியான போட்டி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் சேர்வது ஒரு சிறந்த விஷயமாக இருக்கும். ஆனால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் ஒலிம்பிக்கில் போட்டிகளில் இணைவதற்கு பல சிறந்த விளையாட்டுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கிரிக்கெட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய நேரம் இது. அதற்காக ஒலிம்பிக் அமைப்புடன் கைக்கோர்க்கிறோம்.
அதிகாரிகள் குழு
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பது பற்றி ஆலோசனை நடத்தியது மட்டுமல்லாமல், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய குழுவையும் ஐசிசி ஏற்படுத்தியிருக்கிறது. அந்த குழுவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் இயான் வாட்மோர், முன்னாள் ஃபெப்சிகோ செயல் தலைவர் இந்திரா நூயி, அமெரிக்க கிரிக்கெட் தலைவர் பராக் மாராதே ஆகியோரும் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ரசிகர்கள் உற்சாகம்
ஒலிம்பிக் வரலாற்றில் கடைசியாக 1900 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.