மும்பை: நோ பாலால் அவுட்டாகி வீரர்கள் வெளியேறுவதை தடுக்க ஐசிசி புதிய விதியை கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.
கிரிக்கெட் மட்டுமல்ல, அனைத்து விதமான போட்டிகளிலும் நடுவர்கள் முடிவுகள் அந்த ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் தன்மை பெற்றவை. நடுவர்களின் தவறான, போதிய அனுபவம் இன்றி கொடுக்கும் முடிவுகள் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகின்றன.
கிரிக்கெட்டில் சில நேரங்களில் எடுக்கும் முடிவுகள், ஆட்டத்தின் முடிவையே மாற்றி இருக்கின்றன. அதற்கு மிக பெரிய உதாரணமாக காண்பிக்கப்படுவது இங்கிலாந்து, நியூசிலாந்து பைனலில் கொடுக்கப்பட்ட ஓவர் த்ரோ ரன்கள் தான்.
அதனை தடுக்க ஐசிசி ரிவ்வியூ என்னும் புதிய விதியை நடைமுறைப்படுத்தியது. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். அதனால் நோ பால், எல்பிடபுள்யூ விக்கெட்டுகளை வீரர்களால் கேட்க முடியாமல் போய்விடுகிறது.
அதனை கருத்தில் கொண்டு விக்கெட் விழும் ஒவ்வொரு சமயமும் நடுவர்கள் நோ பால் வீசப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டு வர வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த விதியை அமல்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. தற்போது இந்த விதியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் செயல்படுத்த ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நோ பால் மூலம் ஏற்படும் விக்கெட்டுகளை தடுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.