என்ன கூறி உள்ளது ஐசிசி?
பந்தை எப்படி கையாள்வது என்பது பற்றி அந்த விதிமுறைகளில் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பாதுகாப்பான சூழல், வீரர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, போட்டிக்கு முந்தைய பரிசோதனைகள் ஆகியவற்றை பற்றியும் கூறி உள்ளது ஐசிசி.
எச்சில் பயன்படுத்தக் கூடாது
கிரிக்கெட் பந்தை கையாள்வது குறித்த விதிகளில் முதலாவது பந்தின் மீது எச்சில் பயன்படுத்தக் கூடாது என்பது தான். அடுத்து அம்பயர்கள் தங்கள் கைகளில் உறைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். வீரர்கள் ஓவர்களுக்கு இடையே தங்கள் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அம்பயரிடம் கொடுக்க முடியாது
இதுவரை வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் சன் கிளாஸ், கேப், கர்சீப் என எல்லாவற்றையும் ஸ்டாண்டில் மாட்டுவது போல அம்பயரிடம் கொடுத்து வந்தனர். அந்த வேலையை இனி அம்பயர் செய்ய மாட்டார் என்பதும் ஐசிசி விதிகளில் ஒன்று.
சிக்கல்
வீரர்கள் தங்கள் பொருட்கள் அனைத்தையும் தாங்களே நிர்வகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது சிக்கலானது. அந்த பொருட்களை தங்கள் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு சிரமத்துடன் ஆட வேண்டிய கட்டாயம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சானிடைசர்
அதே போல, ஓவர்களுக்கு இடையே அனைத்து வீரர்களும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களே சானிடைசர் பாட்டிலை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அதை பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டு எப்படி ஓடி, விழுந்து பீல்டிங் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பயிற்சி செய்யும் முன்..
இது வரை வீரர்கள் பயிற்சிக்கு வரும் போது அங்கே குளிக்கவும், உடை மாற்றவும் அறை இருக்கும். இனி அப்படி அனைத்து வீரர்களும் ஒரே இடத்தை பயன்படுத்துவது சிக்கல் என்பதால் வீரர்கள் இதை எல்லாம் செய்து விட்டே பயிற்சி செய்ய வர வேண்டும் என ஐசிசி கூறி உள்ளது.
இருமல், தும்மல் வந்தால்
அடுத்து இருமல், தும்மல் வரும் போது வீரர்கள் தங்கள் கை முட்டியை மடக்கி அதற்குள் அதை முடித்துக் கொள்ள வேண்டும். வாட்டர் பாட்டில், துண்டு உள்ளிட்ட எந்த பொருளையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் கூறி உள்ளது ஐசிசி.
தனிமைப்படுத்த வேண்டும்
போட்டிக்கு முன் 14 நாட்கள் வீரர்கள் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என கூறி உள்ள ஐசிசி, அப்போது வீரர்களின் உடல்நிலை, உடல் சூடு, பாதிப்பு ஏற்படக் கூடிய நிலை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.
தனி விமானம்
ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது சுத்திகரிக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டிற்கு சென்றால் தனி விமானத்தில் செல்ல வேண்டும். விமானத்துக்குள் சமூக இடைவெளி விட்டு வீரர்கள் அமர வேண்டும் என்றும் கூறி உள்ளது ஐசிசி.
தனி அறை
மைதானத்துக்குள் தங்கும் வசதி இல்லை என்றால், தங்கும் ஹோட்டலில் வீரர்களுக்கு என தனி மாடியை ஒதுக்க வேண்டும். அதே போல, வீரர்கள் ஒரே அறையை பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் ஐசிசியின் விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஐசிசி கூறி உள்ள விதிகள் அனைத்தையும் கடைபிடித்து கிரிக்கெட் ஆடுவது கடினத்திலும், கடினம்.