ஐசிசி மாத சிறப்பு வீரர்
சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று கடந்த வாரத்தில் ஐசிசி அறிவித்துள்ளது.
விருது அறிவிக்க முடிவு
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை இந்த விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள குழுவினர் இந்த விருதை இறுதி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 சதவிகித ரசிகர்களின் வாக்கெடுப்பும் இதில் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் பெயர் பரிந்துரை
இந்நிலையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைகளை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த ரிஷப் பந்த், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஐயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரை
இதேபோல வீராங்கனைகள் வரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பாய்க், தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் ஷப்னிம் இஸ்மாயில், மாரிசானே காப் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரருக்கான மாத விருது ரிஷப் பந்த்திற்கு அறிவிக்கப்பட்டால், முதல் விருதை பெறும் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.