2022க்கு தள்ளி வைப்பு
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2022 நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல நியூசிலாந்தில் நடைபெறவிருந்த ஒருநாள் மகளிர் உலக கோப்பை தொடரும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
2023 பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் 2022ல் நவம்பர் மாதத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை மூன்று மாதங்கள் அதாவது 2023 பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி சிஇஓ மனு சாவ்னி தெரிவித்துள்ளார். இது சரியான முடிவாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீராங்கனைகளுக்கு கால அவகாசம்
2022 ஜூலை மாதத்தில் காமன்வெல்த் போட்டிகள், மகளிர் ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 மகளிர் உலக கோப்பை ஆகிய 3 மிகப்பெரிய தொடர்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் வீராங்கனைகள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடரை சிறப்பாக எதிர்கொள்ள போதிய அவகாசம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்
வீராங்கனைகளின் அதிகப்படியான வேளைப்பளு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாவ்னி மேலும் கூறினார். மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.