ஜூன் 10ல் ஐசிசி முடிவு
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வரும் 10ம் தேதி ஐசிசி கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. ஆனால் இந்த ஆண்டே திட்டமிட்டபடி நடத்தவும், ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்தவும் ஒரு திட்டமும் உள்ளதாக ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காத்திருக்க அக்ரம் வேண்டுகோள்
இதனிடையே டி20 உலக கோப்பை போன்ற ஒரு தொடர் குறித்து போகிற போக்கில் திட்டமிடக்கூடாது என்றும் அது அதிகமான ரசிகர்கள் குறிப்பாக வெளிநாட்டு ரசிகர்கள் அதிகளவில் வந்து பார்க்கும் தொடர் என்றும் முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். சரியான நேரத்திற்காக காத்திருந்து இந்த தொடரை நடத்த வேண்டும் என்றும் ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசி திட்டமிட்டு நடத்த வேண்டும்
பார்வையாளர்கள் இல்லாத காலி மைதானங்களில் டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது சரியாக இருக்காது என்றும் கொரோனா வைரஸ் பிரச்சினைகள் தீர்ந்தவுடன் ரசிகர்களுடன் கூடிய உலக கோப்பை தொடரை ஐசிசி திட்டமிட்டு நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனிடையே பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கும் வாசிம் அக்ரம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வியர்வையை பயன்படுத்துவதற்கு மட்டும் தலையாட்டியுள்ள ஐசிசியின் பரிந்துரை சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதிகப்படியான வியர்வையை பயன்படுத்தினால் பந்து ஈரமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உடனடியாக சிறந்த முடிவை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.