ஐசிசி தலைவர்
முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் தற்போது ஐசிசி தலைவராக இருக்கிறார். அவருக்கும் தற்போதே பிசிசிஐ லாபிக்கும் இடையே பல பிரச்சனைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிரச்சனைகள் இப்போது கிரிக்கெட் உலகை பாதிக்கத் துவங்கி உள்ளது.
பிசிசிஐ உடன் மோதல் போக்கு
பிசிசிஐ உடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தது ஐசிசி. 2016 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்திய அரசுக்கு வரி பிடித்தம் செய்து அளித்தது தொடரின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த தொலைக்காட்சி. அதே தொகையை பிசிசிஐயின் பங்கில் கழித்துக் கொண்டது ஐசிசி. அந்த வரி தொடர்பாக பிசிசிஐ - ஐசிசி இடையே தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை வரி விலக்கு
இந்த நிலையில், 2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வரி விலக்கை முன்பே அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என ஐசிசி கோரி இருந்தது. ஆனால், அது சாத்தியமில்லாத ஒன்று என கூறப்படுகிறது.
வெளியான ஈமெயில்
பிசிசிஐ இதுவரை அரசிடம் இருந்து வரி விலக்கு பெறவில்லை. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை நடத்தும் உரிமையை பறித்துக் கொள்வதாக ஈமெயில்கள் அனுப்பி இருந்தது ஐசிசி. பிசிசிஐ அதற்கு பதில் அனுப்பி இருந்தது. இந்த ஈமெயில் விவகாரம் ஊடகங்களில் வெளியானது.
ஐபிஎல் தொடர்
இதற்கிடையே 2020 டி20 உலகக்கோப்பை தள்ளிப் போகும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை அதே மாதத்தில் நடத்தலாம் என பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஐசிசி டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்தியா - ஆஸி. இருதரப்பு தொடர்
அதே போல, 2020 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதை விட இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆடினால் வருவாய் கிடைக்கும் என நவம்பர் மாதம் டெஸ்ட் தொடரை திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலியா. முழு அளவில் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
சிக்கலை உண்டாக்கிய ஐசிசி
இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு நாடுகளும் 2020 டி20 உலகக்கோப்பை தள்ளிப் போகும் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. ஆனால், இந்த இரு அணிகளுக்கும் தலைவலி கொடுக்கும் வகையில் ஐசிசி கூட்டத்தில் ஈமெயில் விவகாரம் மட்டுமே பேசப்பட்டு உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர்பான முடிவை ஜூன் 10க்கு தள்ளி வைத்துள்ளது ஐசிசி. மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா ஊடகங்களில் அந்த ஈமெயில் பற்றி எப்படி செய்திகள் கசிந்தன என விசாரிக்க குழு அமைத்துள்ளது ஐசிசி.
ஆஸ்திரேலியாவுக்கும் பாதிப்பு
பிசிசிஐக்கு சிக்கலை உண்டாக்க ஐசிசி எடுத்த இந்த முடிவு ஆஸ்திரேலியாவையும் பாதித்துள்ளது. உலகின் முக்கிய கிரிக்கெட் நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உடன் ஐசிசி மோதி வருவது கிரிக்கெட் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கும் இந்த நேரத்தில் இது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.