ரத்து முடிவு
இந்த நிலையில் இப்போட்டித் தொடரை ரத்து செய்வது குறித்த முடிவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி அது ரத்து செய்யப்பட்டால் அந்த இடத்தில் ஐபிஎல் தொடர் நடக்கலாம் என்று சொல்கிறார்கள். டி20 உலகக் கோப்பைத் தொடரை ரத்து செய்யும் முடிவை இந்த வாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுக்கவுள்ளதாம். இதுகுறித்து பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நாங்க ரெடி
ஒரு வேளை டி20 உலகக் கோப்பைத் தொடர் ரத்து செய்யப்பட்டால் அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரை அடுத்த ஆண்டு அக்டோபரில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாக ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தியாவும் டி20 உலககக் கோப்பைத் தொடரை நடத்தவுள்ளதால் அதிலும் குழப்பம். எனவேதான் இந்த ஆண்டு தொடரை ரத்து செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாம்.
இங்கிலாந்து பெஸ்ட்
டி20 உலகக் கோப்பைத் தொடரை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக அந்த சமயத்தில் இங்கிலாந்துக்குப் போய் அங்கு இரு தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கலாம் என்ற ஐடியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வந்துள்ளதாம். செப்டம்பரில் இந்தத் தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தானுடன் அடுத்தடுத்து இரு தரப்பு தொடரில் ஆடவுள்ளது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் இவை ஆடவுள்ளன.
இலங்கைக்குப் போகுமா ஐபிஎல்
இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளை நடத்தும் முடிவில் தீவிரமாக உள்ள பிசிசிஐ அவசியம் ஏற்பட்டால் வெளிநாடு ஒன்றில் அதை நடத்தவும் ஆயத்தமாகி வருகிறதாம். அனேகமாக இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இவை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த நாடுகளும் போட்டியை நடத்த தயாராக உள்ளனவாம். இந்த நாடுகளில் கொரோனா குவாரன்டைன் விதிமுறைகளும் கூட கெடுபிடியாக இல்லை என்பது இன்னொரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.