வீரர்களுக்கு கொரோனா
ஐபிஎல் 2021 தொடரின் அடுத்தடுத்த வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே, கேகேஆர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது.
ஐபிஎல் தொடர் தள்ளிவைப்பு
இந்த அறிவிப்பை பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா உறுதி செய்துள்ளார். ஐபிஎல்லில் விளையாடிவரும் வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் ஒத்திதான் வைக்கப்பபட்டுள்ளதாகவும் ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐக்கு சிக்கல்
ஐபிஎல் 2021 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக பிசிசிஐ எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சிக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் மீண்டும் எப்போது துவங்கும்?
தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மீண்டும் எப்போது துவங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இந்தியாவில் நடத்துவதில் சிக்கல்
இந்நிலையில் டி20 தொடரும் திட்டமிட்டபடி நடைபெறுமா, அதற்குள் கொரோனா தாக்கம் மட்டுபடுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அவ்வாறு இருந்தாலும் உலக அளவிலான அணிகளை இந்தியாவிற்குள் அனுமதித்து டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் உள்ளது.
பிசிசிஐ திட்டம்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை யூஏஇயில் நடத்தியதை போல டி20 உலக கோப்பை தொடரை அங்கு நடத்தும் எண்ணம் பிசிசிஐக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறையாத நிலையில், பிசிசிஐ அந்த முடிவை தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.