டி20 உலகக்கோப்பைக்கு தயாரான அணிகள்
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அனைத்து முன்னணி அணிகளும் அடுத்து 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகத் துவங்கின. இந்திய அணி உட்பட பல அணிகளும் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவத்தை குறைத்து, அதிக டி20 தொடர்களில் பங்கேற்கத் துவங்கின.
கொரோனா வைரஸ்
இந்த நிலையில் மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் உச்சகட்டத்தை எட்டியது. அதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. லாக்டவுன் உள்ளிட்ட கடும் விதிகள் பல நாடுகளில் அமலுக்கு வந்தன. வெளிநாடுகளுக்கு செல்வது கடினமான காரியமாக மாறியது.
ஐபிஎல் தள்ளி வைப்பு
இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதனால், ஐபிஎல் தொடரை வைத்து டி20 உலகக்கோப்பைக்கு தயாராகலாம், தங்கள் நாட்டு டி20 அணியில் இடம் பெறலாம் என கனவு கண்ட பல இளம் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் முடங்கியது. மார்ச் 13க்குப் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. கிரிக்கெட் வீரர்களை தனிமைப்படுத்துவது, பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது என ரசிகர்கள் இல்லாமல் கூட கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பல சிக்கல் உள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிலை
இந்த நிலையில், 2020 உலகக்கோப்பை தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியா அந்த தொடரை நடத்த ஆர்வம் காட்டவில்லை. அதற்கு காரணம் அந்த சிக்கல்கள் தான். அதே சமயம், இருதரப்பு கிரிக்கெட் தொடரை சமாளித்து நடத்தி விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது ஆஸ்திரேலியா.
பெரிய அணிகள் விரும்பவில்லை
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல முக்கிய அணிகள் இந்த ஆண்டு உலகக்கோப்பை தேவையில்லை என்ற மன நிலையில் தான் உள்ளன. அதற்கு முக்கிய காரணம் உலகக்கோப்பை தொடரை விட இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் அதிக வருமானம் கிடைக்கும். அதன் மூலம் கொரோனா வைரஸால் சந்தித்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்ற எண்ணத்தில் உள்ளன.
ஐசிசி முடிவு இதுதான்
ஐசிசியாலும் அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து அணிகளையும் ஒருங்கிணைத்து, வீரர்களை தனிமைப்படுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் உலகக்கோப்பை தொடரை நடத்தி விட முடியாது. அதனால், ஐசிசி நிர்வாகிகள் 2020 டி20 உலகக்கோப்பை தொடரை 2022க்கு தள்ளி வைக்க ஏற்கனவே முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அறிவிப்பு மட்டுமே
2021இல் மற்றொரு டி20 உலகக்கோப்பை தொடர் நடக்க இருப்பதால் 2020 உலகக்கோப்பையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது ஐசிசி. இந்த நிலையில், இந்த முடிவை அறிவிக்க மட்டுமே ஐசிசி கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ குஷி
உலகக்கோப்பையை தள்ளி வைக்கும் முடிவு பிசிசிஐக்கு சாதகமான ஒன்றாகும். அதன் மூலம், உலகக்கோப்பை நடக்க இருந்த அக்டோபர் மாதம் எந்த கிரிக்கெட் தொடரும் நடைபெறாது. அப்போது தள்ளி வைக்கப்பட்ட 2020 ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தக்கூடும்.
வரி விலக்கு விவாதம்
இதே ஐசிசி கூட்டத்தில் இந்தியாவில் நடைபெற உள்ள 2021 டி20 உலகக்கோப்பைக்கான வரி விலக்கு பற்றியும் விவாதம் நடக்க உள்ளது. இந்திய அரசு டி20 உலகக்கோப்பைக்கு வரி விலக்கு அளிக்கவில்லை. அது குறித்து ஐசிசி - பிசிசிஐ இடையே விவாதம் நடந்து வருகிறது.