லண்டன்: இந்திய ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுத்து மீண்டும் பேட் செய்ய வந்தும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா முதலில் பந்து வீசியது. 16வது ஓவரை குல்தீப் யாதவ் வீசியபோது, பெர்ஸ்டோவ் ஒரு சிக்சர் அடித்தார். அந்த பந்து எல்லைக் கோட்டின் அருகே சென்றபோது, ஜம்ப் செய்து, பந்தை கேட்ச்சாக மாற்ற ராகுல் முயன்றார். ஆனால் பந்து சிக்சர் சென்றது. ராகுல் நிலைதடுமாறி, மல்லாக்க விழுந்தார். அப்போது அவரது முதுகில் அடி விழுந்தது.
இதன்பிறகு அவருக்கு பதிலாக, ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங் செய்ய வந்தார். இறுதிவரை அவர் ஃபீல்டிங் திரும்பவில்லை. எனவே பேட்டிங் செய்ய ராகுல் வருவாரா என்பது கேள்விக்குறியானது. ஏற்கனவே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய, ஷிகர் தவான் கை விரல் காயம் காரணமாக உலக கோப்பை தொடரை விட்டு விலகியுள்ளார். இப்போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் ரசிகர்கள் நகம் கடிக்க ஆரம்பித்தனர்.
ஒரு வழியாக ரோகித் ஷர்மாவுடன், தொடக்க ஆட்டக்காரராக ராகுல் களமிறங்கினார். ராகுல்குக லேசான காயம்தான் ஏற்பட்டிருந்ததாகவும், முதலுதவி சிகிச்சைகளுக்கு பிறகு, பேட்டிங்கிற்கு அவர் களமிறங்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார் ராகுல். 9 பந்துகளை விழுங்கியதோடு ஒரு ரன் கூட அடிக்கவில்லை. அவர் பேசாமல் பெவிலியனிலேயே ரெஸ்ட் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கல் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.