விசா குறித்து பிசிபி கோரிக்கை
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியா நடத்தவுள்ளது. இதில் சர்வதேச அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் விசா குறித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பிசிசிஐயிடம் இருந்து ஐசிசி அடுத்த மாதத்திற்குள் பெற்றுத்தர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மணி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரவாதம் பெற்றுத்தர கோரிக்கை
கடந்த சில மாதங்களாகவே இந்த கோரிக்கையை ஈசான் மணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தன்னுடைய அணி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்கப்படுவது குறித்து உத்தரவாதம் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 31ம் தேதியே இது பிசிசிஐயால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி உத்தரவாதம்
ஆனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நலக் குறைவு காரணமாக இது தள்ளிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் இந்த உத்தரவாதத்தை பெற்றுத் தருவதாக ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தான் மீண்டும் நாளை ஆன்லைன் மூலம் ஐசிசியிடம் பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விசா கோருவது பாகிஸ்தான் உரிமை
இந்தியாவில் டி20 உலக கோப்பை நடத்தப்படுவது குறித்து பாகிஸ்தானுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள ஈசான் மணி, டி20 தொடரிலிருந்து பாகிஸ்தானை விலக்கி வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். விசா கேட்பது தங்களது உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.