இந்தியா -ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற இந்த போட்டியில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது.
சொல்லியடித்த ஆஸ்திரேலியா
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. இந்நிலையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, கோப்பையை வெல்லும் என்ற கனவு இந்திய ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அந்த கனவு தற்போது ஆஸ்திரேலியாவின் வெற்றி மூலம் தகர்ந்துள்ளது.
பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, திட்டமிட்டு பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் பேட்டிங்கில் கலக்கினர். ஹீலி 75 ரன்களும் மூனி 78 ரன்களும் எடுத்து தங்களுடைய அணியின் வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தனர்.
துவக்க வீராங்கனைகள் அபாரம்
ஆலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப்பில் 115 ரன்களை குவித்தனர். கண்டிப்பாக ஒரு விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர் ராதா யாதவ், சிறப்பான பந்தை வீசி, அலிசா ஹீலியை அவுட்டாக்கி இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.
கலக்கலான ஆட்டம்
பேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங், பீல்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தனர். பேட்டிங்கில் ஹீலியும் மூனியும் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்த நிலையில், பௌலிங்கில் மெகா ஹுட் 4 விக்கெட்டுகளும் ஜெஸ் ஜான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அதகளம் படுத்தினர். இந்த போட்டியில் விக்கெட்டுகளை தவறவிடாமல் கேட்சையும் பிடித்து பீல்டிங்கிலும் நாங்கள் பெஸ்ட்தான் என்பதை நிரூபித்தனர்.
உற்சாகமாக ஊக்குவித்த ரசிகர்கள்
மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்தப் போட்டியை காண 85,000 பேர் டிக்கெட்டுகளை வாங்கி வந்திருந்தனர். சிலர் நின்றுக் கொண்டே போட்டியை பார்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என்ற வேறுபாடு இல்லாமல் இரு அணியினைரையும் அவர்கள் ஊக்குவித்தனர்.
இந்தியா சொதப்பல்
இந்தப் போட்டியில் 185ஐ இலக்காக கொண்டு இந்தியா சேஸிங்கை தொடர்ந்த நிலையில், இரண்டாவது பந்திலேயே ஷெபாலி வர்மா தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்ட அனைவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்து தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தத்து கொடுத்தது இந்தியா.
முக்கிய கேட்ச் மிஸ்ஸிங்
இந்த ஆட்டத்தில் பேட்டிங், பீல்டிங் இரண்டிலும் இளம் வீராங்கனை ஷெபாலி வர்மா சொதப்பியதை காண முடிந்தது. முதல் ஓவரில், ஆலிசா ஹீலியின் முக்கியமான கேட்சை இவர் பிடிக்க தவறினார். இந்தக் கேட்சை இவர் பிடித்து ஹீலி அவுட்டாக்கப்பட்டிருந்தால் கேம், வேறுமாதிரியாக மாறியிருக்கும். இதேபோல கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி 161 ஸ்டிரைக் ரேட்டுடன் இருந்த இவர், இந்தப் போட்டியில் வெறும் 2 ரன்களில் வெறியேறினார். தானியா பாட்டியா ஹெல்மட்டில் பந்துபட்டு வெளியேறியது ஆட்டத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தொடர் நாயகி பெத் மூனி
இந்தப் போட்டியில் அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் முறையே 75 மற்றும் 78 ரன்களை அடித்து அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். இந்நிலையில் அலிசா ஹீலிக்கு ஆட்ட நாயகி விருது கிடைத்துள்ளது. தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் 259 ரன்களை குவித்துள்ள பெத் மூனிக்கு தொடர் நாயகி விருது கிடைத்துள்ளது.
எதிர்காலம் சிறப்பாக அமையும்
போட்டியை அடுத்து பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்தப் போட்டியின்மூலம் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்றும், பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போதுள்ள இந்த அணியின்மீது நம்பிக்கை உள்ளதாகவும், வருங்காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.