இந்தியாவிற்கு நல்ல துவக்கம்
இந்த போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழக்காமல் பத்து ஓவர்கள் வரை ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர்.
மிதாலி ராஜ் நிதான ஆட்டம்
இந்திய அணியில் அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கியது. மிதாலி ராஜ் ஒருபுறம் பொறுமையாக ஆடினார். மற்றவர்கள் அதிரடியாக ஆடி பவுண்டரிகள் அடித்தாலும் சொற்ப ரன்களில் வெளியேறி வந்தனர். மிதாலி ராஜ் 56 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நின்றால் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்கும். ஆனால், மிதாலி ராஜ் விஷயத்தில் அது தலைகீழாக நடந்தது. இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து தோல்வி அடைந்தது
146 ரன்கள் இலக்கை துரத்த வந்த அயர்லாந்து அணி 5 ஓவர்களுக்கு பின் விக்கெட் சரிவில் சிக்கியது. இதையடுத்து நிதானமாக ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஒருவர் கூட நூறுக்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் பெறவில்லை. ராதா யாதவ் 3, தீப்தி சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆடுகளம் தான் காரணம்
மிதாலி ராஜ் நிதானமாக ரன் குவித்ததை சிலர் விமர்சித்தனர். அவர் அதிரடியாக ரன் அடிக்க முடியாமல் போனதற்கு ஆடுகளம் தான் காரணம் என கூறப்படுகிறது. போட்டிக்கு முந்தைய நாள் இரவு மழை பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதத்தோடு இருந்தது. மறுபுறம், அயர்லாந்து அணி இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் சுத்தமாக எடுபடவில்லை. முக்கியமான போட்டியில் நிதானமாக ஆடி, இன்னும் ஒரு குரூப் போட்டி மீதமிருக்கும் நிலையில், தங்கள் உலகக்கோப்பை தொடர் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.