நல்ல தொடக்கம்
ஃபார்மில் இல்லாமல் திணறிய செஃபாலி வர்மாவுக்கு இந்த போட்டி நல்ல திருப்புமுனையை தந்தது. 42 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களை சேர்த்தார். அவருக்கு பக்க பலமான ஸ்மிருதி மந்தானா 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் 5 ஆயிரம் ரன்களை ஸ்மிருதி மந்தானா சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.
அரைசதம்
இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் மித்தாலி ராஜ் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 4 பந்து இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் களத்துக்கு வந்த யாஷ்திகா பொறுமையாக விளையாடி அரைசதம் அடிக்க, அவருக்கு பூஜா நல்ல ஆதரவு கொடுத்து 30 ரன்களும், ஸ்நே ரானா 27 ரன்களும் சேர்த்தனர்.
வங்கதேசம் 35-5
இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வங்கதேச வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர். 35 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அபார வெற்றி
இதன் பின்னர் சல்மா 30 ரன்களும், லதா 24 ரன்களும் சேர்க்க, வங்கதேச மகளிர் அணி 119 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.