காயம் அடைந்தார்
இந்திய அணியின் பவுலிங்கின் போது புவனேஷ்வர்குமார் 5 வது ஓவரில் காயம் பட்டார். பிட்சில் அவர் சென்று கொண்டு இருக்கும் போதே வழுக்கியதால் காயத்திற்கு உள்ளானார். இதனால் 4 பந்துகள் போட்ட அவர் பாதியில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த ஓவரில் கடைசி 2 பந்துகளை போட விஜய் சங்கர் களத்திற்கு வந்தார்.
வர மாட்டார்
புவனேஸ்வருக்கு தசை பிடிப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட முடியாது. இதனால் புவனேஷ்வர் குமார் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் அணியில் முகமது ஷமி இறங்குவார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் அவரும் போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஏன் இல்லை
அவர் நல்ல அனுபவம் மிக்க வீரர் என்றாலும் ஒரு மாதமாக சரியான பார்மில் இல்லை. பயிற்சி ஆட்டங்களிலும் சரியாக பந்து வீசவில்லை என்கிறார்கள். அதேபோல் மிக முக்கியமாக இந்திய அணியின் வலை பயிற்சியில் அவர் சரியாக பந்து வீசவில்லை என்று கூறப்படுகிறது.
யார் ஆடுவார்
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் அணியில் எடுக்கப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பும்ராவை முதன்மையான பவுலராக வைத்துக் கொண்டு, தீபக் சாஹருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க போகிறார்கள். சென்னை அணிக்கு இவர்தான் ஓப்பனிங் ஸ்பீட் பவுலர். இவரை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியதே தோனிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்ல பார்ம்
இப்போது இவர் நல்ல பார்மில் இருக்கிறார். இவர் வலைப்பயிற்சியில் நன்றாக பந்து வீசினார். இவரின் சிறப்பான பந்து வீச்சை பார்த்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை அணியில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். புவனேஷ்வர் குமார் காயம் அடைந்தால் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சாஸ்திரி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான வாய்ப்பு கணிந்துள்ளது.