என்ன பிரச்சனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தேர்வே வித்தியாசமானது. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளில், விளையாடும் வீரர்கள் மற்றும் மாற்று வீரர்களை அணி தேர்வுக்குழு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் சேர்ந்துதான் தேர்வு செய்வார்கள். இதனால் இந்த வீரர்கள்தான் தேவை, இவர்கள் தேவையில்லை என்பதில் அந்த அணி தெளிவாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் நிலை அப்படி கிடையாது.
தேர்வு எப்படி
பாகிஸ்தானில் தேர்வுக்குழுவிற்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. அதன் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இருக்கிறார். இவர்கள் தேர்வு செய்யும் 20 வீரர்கள் லண்டன் செல்வார்கள். பின் அவர்களில் இருந்து 11 பேரை பாகிஸ்தான் கோச் தேர்வு செய்து விளையாட வைக்கலாம். ஆனால் இந்த 20 வீரர்களை தேர்வு செய்யும் உரிமை பாகிஸ்தான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு கிடையாது.
என்ன சிக்கல்
இதனால் லண்டன் செல்லும் அணியில் சில முக்கிய வீரர்கள் விடுபடும் நிலை ஏற்படலாம். பயிற்சியாளர், கேப்டனுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணிக்குள் வரலாம். இதுதான் தற்போது பாகிஸ்தான் அணிக்குள் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணிக்குள் மூன்று தீவுகளாக வீரர்கள் பிரிந்து இருக்கிறார்கள். பயிற்சியாளருக்கு ஆதரவான வீரர்கள், பயிற்சியாளரை எதிர்க்கும் வீரர்கள், இவர்கள் எல்லோரிடமும் பேசி பாலம் போல செயல்படும் வீரர்கள்.
தோல்வி
இதுதான் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம். ஆம், பாகிஸ்தான் வீரர்கள் பலர் தங்களுக்கு உள்ளேயே பேசிக்கொள்வது இல்லை. அதுதான் களத்தில் ஈகோ பிரச்சனையாக வெடிக்கிறது. இதனால் போட்டியில் வீரர்கள் சரியாக செயல்பட முடியவில்லை. அணியின் தோல்விக்கு காரணமாக அது முடிந்துவிடுகிறது.
தற்கொலை முயற்சி
இந்த தொடர் பிரச்சனையால் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அந்நாட்டு கோச் மைக்கி ஆர்தருக்கு எதிராக தேர்வு வாரியத்திடமும் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் கோச் மைக்கி தற்கொலை செய்ய முயன்றதாக பேட்டியில் கூறியதும் அரங்கேறியது.
ஆம் தற்கொலை
ஆம் நான் தற்கொலை செய்ய யோசித்தேன் என்று மைக்கி வெளிப்படையாக கூறி உள்ளார். இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டிக்கு பின் உடை மாற்றும் அறையில் தோல்வி தொடர்பாக வீரர்களை இடையே வாக்கு வாதம் நடந்து இருக்கிறது. இதன் பின்பே இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் கிளம்பி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்பே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியானது.
சரியாகும்
2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் மரணம் அடைந்தார். அது தற்கொலை என்று இப்போதும் சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி இப்போதுதான் கொஞ்ச வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இம்ரான் தொடங்கி அக்தர் வரை பல ஜாம்பவான்களை பார்த்த அணிதான் பாகிஸ்தான். தற்போது இருக்கும் சூழ்நிலையை அந்த அணி கடந்த வர வேண்டும். இது பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பம் மட்டுமல்ல எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமும் அதுதான்!