என்ன நடந்தது
இந்தியா, வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்கள். இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் நிதானமாக ஆடியது. ஆனால் வங்கதேச வீரர்களால் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை.
பாண்டியா எப்படி
வங்கதேசத்திற்கு எதிரான இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் போட்டியை இந்தியா பக்கம் திருப்பிய வீரர் என்றால் அது கண்டிப்பாக பாண்டியாதான். பாண்டியா போட்ட 16வது ஓவரின் முதல் பந்தில்தான் விக்கெட் விழுந்தது. அந்த பந்தில், சரியாக சில்லி மிட் ஆன் திசையில் நின்று இருந்த கோலியிடம் சவுமியா சர்க்கார் கேட்ச் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அவர்தான் பாண்டியா செய்த முதல் சம்பவம்.
அடுத்த விக்கெட்
அடுத்த விக்கெட் 30வது ஓவரின் 4வது பந்தில் விழுந்தது. அந்த ஓவரில் பாண்டியா போட்ட ஷார்ட் பாலை லித்தோன் தாஸ் எதிர்கொண்டார். இதை எப்படி அடிப்பது என்று தெரியாமல் குழம்பிய தாஸ் சுற்றி வளைத்து, மிட் விக்கெட் திசையில் இருந்த தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில்தான் தாஸ் பாண்டியா பந்தில் சிக்ஸ் அடித்து இருந்தார்.
போட்டி மாறியது
அதேபோல் 34 ஓவரின் ஐந்தாவது பந்தில் பாண்டியா போட்ட ஸ்லோ பாலை ஷாகிப் அல் ஹசன் எதிர்கொண்டார். இந்த பந்து சரியாக லெக் திசையில் வந்தது.அதை எக்ஸ்டரா கவர் திசையில் அடிக்க முயன்ற ஷாகிப் அல் ஹசன் அவுட்டானார். சரியாக அங்கு பீல்டிங் செய்து கொண்டு இருந்த தினேஷ் கார்த்திக் அதை கேட்ச் பிடித்தார்.
மூன்று பேர்
ஷாகிப் அல் ஹசன், லித்தோன் தாஸ், சவுமியா சர்க்கார் ஆகியோர்தான் இத்தனை நாட்கள் வங்கதேசம் அணியை பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற வைத்தது. அவர்களே அவுட்டானது அந்த அணியை ஆட்டம் காண வைத்தது. இப்படி மூன்று முக்கியமான வீரர்களை பாண்டியா விக்கெட் எடுத்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.