எத்தனை தோல்வி
இந்த 2019 உலகக் கோப்பை தொடர் முழுக்கவே பாகிஸ்தான் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது. இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாட வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைபட்டது.
மோசமில்லை
இதனால் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இது தற்போது பாகிஸ்தான் ரசிகர்களை பெரும் கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இனி வரும் போட்டிகளில் பாகிஸ்தான் வரிசையாக வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் செமி பைனலுக்கு செல்ல முடியும்.
பாகிஸ்தான் இந்தியா
முக்கியமாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததுதான் அந்த அணிக்கு மிக மிக வருத்தமான விஷயம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 336 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
பிரச்சனை
இந்த தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளருக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகிறது. பாகிஸ்தான் அணியில் வீரர்கள் மற்றும் கோச் மைக்கி ஆர்த்தர் இடையில் கடுமையான மனஸ்தாபம் நிலவி வருகிறது. இது வெளியே வெளிப்படையாக செய்திகளில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.
என்ன பேட்டி
இந்த நிலையில் இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் கோச் மைக்கி ஆர்த்தர் பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். அந்த அளவிற்கு மன அழுத்தம் இருந்தது. ஆனால் அது ஒரே ஒரு போட்டிதான். உங்கள் எல்லோருக்குமே பிரச்சனை என்ன என்பது தெரியும்.
எத்தனை வேகம்
எல்லாம் வேகமாக நடந்துவிட்டது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தோம். அதன்பின் இன்னொரு போட்டியில் தோல்வி அடைந்தோம். இப்படியே வரிசையாக நடந்தது. இது உலகக் கோப்பை. மக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். உங்களிடம் மீடியா கேள்வி கேட்கும். எப்படி வாழ்வது என்பதே கேள்வியாக இருக்கும். நாம் எல்லோரும் அதை கடந்து வந்திருப்போம், வர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரிய சர்ச்சை
அவரின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையாகி உள்ளது. அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் மரணம் அடைந்தார். அது தற்கொலை என்று இப்போதும் சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.