என்ன செய்தார்
இந்திய அணியில் இன்று மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வருகிறது, முக்கியமான வீரர் ஒருவர் அணிக்குள் கொண்டு வரப்படுவார் என்கிறார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஒரே வீரர் என்றால் அது கேதார் ஜாதவ்தான். அவர் இந்திய அணி இரண்டு முறை வெற்றிபெற்ற போதிலும், வெற்றிக்காக ஒரு துளி கூட உழைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
மோசமாக விளையாடினார்
அதேபோல் இரண்டு போட்டிகளிலும் அவர் அதிக அளவில் ரன்களை விட்டுக்கொடுத்தார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் ஒரே ஒரு ஓவர் போட்டாலும் கூட 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல் இவருக்கு பேட்டிங் செய்யவும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்கிறார்கள்.
இன்று போட்டி
அதன்படி இன்றைய போட்டியில் கேதார் ஜாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஜடேஜாவை களமிறக்க இந்திய அணி முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது, ஜடேஜா தற்போது மிக சிறப்பான பார்மில் இருக்கிறார். இதனால் அவரை அணிக்குள் கொண்டு வந்தால் இந்திய அணிக்கு புதிய பலம் கிடைக்கும்.
எப்படி கிடைக்கும்
முக்கியமாக ஜடேஜா நல்ல பவுலிங் போட கூடியவர். இதனால் குல்தீப் விக்கெட் எடுக்காத நேரங்களில் ஜடேஜா சாஹலுக்கு ஆதரவாக இருப்பார். முக்கியமான நேரங்களில் ஜடேஜா முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆட்டத்தின் போக்கை இவரின் பவுலிங் மாற்ற வாய்ப்புள்ளது.
பேட்டிங் மூலம் மாற்றுவார்
அதேபோல் ஜடேஜா தன்னுடைய பேட்டிங் மூலம் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பீல்டிங்கும் செய்கிறார். கடைசி நேரத்தில் இறங்கும் ஜடேஜா ஒரு 20 ரன்களை அதிரடியாக எடுத்து அணிக்கு பலம் சேர்க்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .