எப்படி நடந்தது
நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. 50 ஓவரில் 237 ரன்கள் மட்டும் அந்த அணி எடுத்தது. ஜேம்ஸ் நீசன் 97, கேன் வில்லியம்சன் 41 என்ற இரண்டு வீரர்கள் மட்டும் அந்த அணியில் நன்றாக ஆடினார்கள்.
செம பாஸ்
அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் நிதானமாக ஆடினர். முக்கியமாக பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் மிகவும் பொறுமையாக ஆடினார். இவர் 127 பந்தில் 101 ரன்கள் எடுத்தார். அதன்பின் கடைசியில் வந்த ஹரிஸ் சோஹில் 68 ரன்கள் எடுத்து கலக்கினார். இதனால் பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 241 ரன்கள் எடுத்து வென்றது.
ஏன் முக்கியம்
இந்த போட்டியில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது செமி பைனல் கனவை உயிர்ப்போடு வைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. ஆம் , இங்கிலாந்து அணி அடுத்தடுத்து நியூசிலாந்து மற்றும் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் இரண்டிலும் அந்த அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டியில் வென்றால் கதையே மொத்தமாக மாறும்.
என்ன நடக்கும்
அப்படி மட்டும் ஒருவேளை நடந்தால் பாகிஸ்தான் அணி செமி பைனலுக்கு செல்லும். இங்கிலாந்து அணி வெளியே செல்லும். இதனால் பாகிஸ்தான் வெற்றி தற்போது இங்கிலாந்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் வெற்றி இலங்கை, வங்கதேசம் வாய்ப்புகளையும் சிதறடித்துள்ளது.
எல்லாம் போனது
ஆம் பாகிஸ்தான் அணியின் வெற்றி காரணமாக இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டு அணியும் வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே செமி பைனல் கனவை அந்த அணிகள் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். இப்படி பாகிஸ்தானின் ஒரு வெற்றி, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் என்று நான்கு அணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.