எப்படி ஆட்டம்
ரோஹித் சர்மா எப்போதும் தொடக்கத்தில் மெதுவாக ஆட கூடியவர். 130 பந்துகளில் சதம் அடித்துவிட்டு, அடுத்த 50 பந்தில் இரட்டை சதத்தை தொடங்கக்கூடிய திறமை கொண்டவர்தான் ரோஹித் சர்மா. ஆனால் அவர் நேற்று தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். விறுவிறுப்பாக ஆட தொடங்கிய ரோஹித் வந்த பந்துகளை எல்லாம் எல்லா திசைக்கும் பறக்கவிட்டார்.
கனிவு இல்லை
எந்த பாகிஸ்தான் பவுலரையும் அவர் விட்டு வைக்காமல் அடித்தார். வெறும் 35 பந்துகளில் அரைசதம் எடுத்தார். வஹாப் மற்றும் அமீர் பந்துகளை கூட ரோஹித் சர்மா புரட்டி எடுத்தார். அதேபோல் ஹசன் அலி, சதாப் கான் பந்துகளையும் பறக்கவிட்டார். எங்கள் பவுலிங் ஆர்டர் மிகவும் வலுவானது என்று கூறிய பாகிஸ்தான் அணியை ''எங்க கேட்கலை.. திரும்ப சொல்லுங்க'' என்று நக்கலாக டீல் செய்தார்.
அமீர்தான்
முக்கியமாக கோலி கூட திணறிய அமீர் ஓவரை கொஞ்சம் கூட யோசிக்காமல் துவைத்து தொங்க போட்டார். அவர் அடித்த 3வது சிக்ஸரில் சென்ற பந்து மான்செஸ்டரில் இருந்து மந்தைவெளியில் விழுந்து காணாமல் போனது. சரியாக 3வது ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடினார். 84 பந்துகளிலேயே செஞ்சுரி கடந்து வேகமாக அடிக்க தொடங்கினார்.
கெத்து
எனக்கு வெறி இருக்கிறது.. 8 செஞ்சுரி அடிச்சாதான் ஒரு கப் கிடைக்கும் என்று கேஜிஎப் வசனத்தை மட்டும்தான் ரோஹித் நேற்று ரீமேக் செய்து பேசவில்லை. மற்றபடி அவர் செய்தது எல்லாம் தரமான ஹீரோயிசம் என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவர் இந்த போட்டியில் மட்டும் இப்படி ஆடவில்லை. உலகக் கோப்பை தொடக்கத்தில் இருந்தே அவர் இப்படித்தான் ஆடி வருகிறார்.
எப்படி ஆடுகிறார்
உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அதில் ரோஹித் சர்மா மட்டுமே 122 ரன்கள் அடித்தார். தவான், கோலி, கே எல் ராகுல் என்று எல்லோரும் ஏமாற்றம் அளித்தார்கள். இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மிக சிறப்பு
அந்த போட்டியில் ரோஹித்தின் பேட்டிங்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. மிகவும் நிதானமாக ஆடினார். தேவையில்லாத பந்துகளை விட்டார். அன்று ஆடிய ரோஹித்திடம் ரோஹித்தை விட தோனிதான் அதிகம் இருந்தார். அணியின் வெற்றிகாக எந்த தூரத்திற்கும் செல்ல ரோஹித் தயாராகி இருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 70 பந்திற்கு பொறுமையாக 57 ரன்கள் எடுத்தார்.
வாவ் பாஸ்
ரோஹித், நான் என் வாழ்நாளில் மிக சிறந்த நாட்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நேற்று குறிப்பிட்டார். ஆம் அவர் தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டு விளையாடுகிறார். அவரின் ஒவ்வொரு பேட்டிங்கிலும் அது அப்படியே தெரிகிறது. 2011ல் யுவராஜ் செய்த அதே செயலை தற்போது ரோஹித் சர்மா செய்கிறார்.
பசி
அவரின் இந்த ஆட்டத்திற்கு பின் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அந்த மஞ்சள் நிற பளபளப்பான கோப்பைதான் அவரின் ஒரே குறிக்கோள். அவர் வீட்டில் புது வரவாக மகள் பிறந்து இருக்கிறாள். தன்னுடைய மகளுக்கு பரிசாக கொடுக்க அவருக்கு வெறும் ஐபிஎல் கோப்பை மட்டும் போதாது.. அந்த பிஞ்சு கைகளுக்கு இந்த மஞ்சள் கோப்பையும் வேண்டும். அதை அவர் தனது குட்டி மகளுக்காக கண்டிப்பாக கொண்டு வருவார்!