எப்போது என்ன
எப்போதும் இந்திய அணிக்காக விக்கெட்டுகளை எடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வீரர் முகமது ஷமி. ஆனால் நேற்று இவருக்கான நாள் கிடையாது. நேற்று இவர் போட்ட பந்துகளை எல்லாம் வங்கதேச வீரர்கள் பறக்கவிட்டார்கள். தமீம் இஃபாலை விக்கெட் எடுத்த பின் இவரால் வேறு யாரையும் விக்கெட் எடுக்கவே முடியவில்லை.
ரன் கொடுத்தார்
அதேபோல் இவர் தேவையில்லாமல் அதிகமாக ரன்னும் கொடுத்தார். முக்கியமாக இவரை வைத்து வங்கதேசம் அணி தனது ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டே வந்தது. இவர் போட்ட 38வது ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிங்கிள் என்று மொத்தம் 17 ரன்களை வாரி வழங்கினார். அதன்பின் மீண்டும் வந்த ஷமி 42வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிங்கிள் என்று 11 ரன்களை வாரி வழங்கினார்.
என்ன செய்தார்
ஷமிக்கு அதன்பின் கை வசம் 2 ஓவர் இருந்தது. ஆனால் கோலி போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல விரும்பவில்லை. களத்தில் இருந்த சையபுதீன் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக ஆடி வெற்றிபெற கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதற்கு முன்பே போட்டியை முடிக்க கோலி முடிவெடுத்தார். இதனால் வரிசையாக கோலி புவனேஷ்வர்குமார் மற்றும் பும்ராவிற்கு ஓவர்களை கொடுத்தார்.
எப்போதும்
பும்ரா எப்போதும் 48 மற்றும் 50 வது ஓவர்களை போடுவதே வழக்கம். அவர் அப்போது அதிகமாக ரன் கொடுக்க மாட்டார் என்பதால் அவரது இரண்டு ஓவர்களை மிச்சம் வைத்து மற்ற வீரர்களுக்கு கோலி பவுலிங் அளிப்பார். ஆனால் நேற்று போட்டியில் 46 வது ஓவரிலேயே பும்ரா தனது 9வது ஓவரை வீசிவிட்டார். அதன்பின் 48வது ஓவரும் பும்ராவிற்கு (அவரின் கடைசி ஓவர்) கொடுக்கப்பட்டது.
கடைசி ஓவர்
கடைசி ஓவர் வரை சென்றால்தானே வங்கதேசம் வெற்றிபெறும். அதை இப்போதே முடிக்கிறேன் என்று பும்ராவை வைத்து 48வது ஓவரிலேயே போட்டியை முடிக்க பும்ரா முடிவு செய்தார். அது அப்படியே திட்டமிட்டபடி நடந்தது. வரிசையாக யார்க்கர் பந்துகளை போட்ட பும்ரா இரண்டு வங்கதேச பவுலர்களையும் அடுத்தடுத்து காலி செய்தார்.
செம முடிவு
கடைசி ஓவர் வரை நேற்று போட்டி நடந்து இருந்தால் கண்டிப்பாக வங்கதேசம் வெற்றி பெற்று இருக்கும். ஆனால் கோலி தன்னுடைய புத்திசாலித்தனமான முடிவால் போட்டியை திசை திருப்பினார். இந்த உலகக் கோப்பை தொடரில் பவுலிங் ஆர்டரை சிறப்பாக பயன்படுத்தும் கேப்டன்களில் கோலி தனித்து தெரிய தொடங்கி உள்ளார்.