தென்னாப்பிரிக்கா பவுலர்
நேற்று இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்கா பவுலர் லுங்கி நிகிடி பாதி போட்டிக்கு நடுவில் காணாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தென்னாபிரிக்காவின் 7வது ஓவரை போட்டார். அந்த ஓவர் முடிந்ததும் இவர் பெவிலியன் திரும்பினார். பீல்டிங் செய்ய சென்றவர் அப்படியே அறைக்கு திரும்பினார்.
சொல்லவில்லை
இவர் முதலில் உள்ளே சென்ற போது யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். இவர் எங்கே சென்றார் என்று முதலில் அணியில் சில வீரர்களுக்கே தெரியவில்லை. அதன்பின் மாற்று வீரர் களமிறக்கப்பட்டு பீல்டிங் செய்ய வைக்கப்பட்டார்.
ஏன் அப்படி சென்றார்
லுங்கி கடுமையான முதுகுவலி காரணமாக இப்படி வேகமாக யாரிடமும் சொல்லாமல் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. நேற்று அவர் ஓவர் போட்டுக்கொண்டு இருக்கும் போது மோசமான முதுகுவலி ஏற்பட்டு இருக்கிறது. அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார் என்று கூறுகிறார்கள்.
என்ன பிரச்சனை
அவருக்கு முதுகிலும், கையிலும் மோசமான தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தசை பிடிப்பு காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து அவர் வேகமாக வெளியேறி உள்ளார். இதுதான் நேற்று போட்டிக்கு நடுவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த தசை பிடிப்பிற்காக அவர் தற்போது சிகிச்சை பெற்ற வருகிறார். இன்று அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதன்பின் அதை வைத்து அவர் மேலும் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தென்னாபிரிக்கா அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கண்டிப்பாக இல்லையா
ஆனால் இவர் கண்டிப்பாக இந்தியாவிற்கு எதிராக நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மோதும் போட்டி வரும் புதன் கிழமை நடக்கிறது. இதில் இவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த போட்டிக்குள் இவர் தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.