என்ன ஆட்டம்
இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்து வெளியேறியபின் அணிக்குள் வரிசையாக அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் நடந்தது. பல நாட்களாக புகைந்து கொண்டு இருந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கியது. தற்போது வீரர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
என்ன புகைச்சல்
முதல் பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பித்தது, இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மும்பை வந்த போதுதான். அவர்தான் இந்திய வீரர்களுடன் ஒன்றாக இந்தியாவிற்கு திரும்பாமல் தனி ஆளாக மும்பைக்கு வந்தார். எப்போதும் நடக்காத இந்த நிகழ்வு பெரிய சர்ச்சையானது. ஏன் ரோஹித் சர்மா இப்படி தனியாக வந்தார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
அடுத்து என்ன
அதற்கு அடுத்து கோலியின் தலைமை பதவி குறித்து நேரடியாக கேள்விகள் எழுந்தது. பிசிசிஐ நடத்த உள்ள சந்திப்பு கூட்டத்தில் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்படும் என்று கூறினார்கள். இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணம் என்று வெளிப்படையாக கோலியிடம் கேள்விகள் கேட்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் செய்திகள் வெளியானது.
பயிற்சியாளர்
அதேபோல்தான் இந்திய அணியின் பயிற்சியாளரும் தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வாரங்களில் முடிகிறது. ஆனால் இன்னும் இந்திய அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி என்ன
அதேபோல் இந்திய அணியின் மூத்த வீரர் தோனியை எப்போது வேண்டுமானாலும் அணியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு எடுக்கலாம் என்று கூறுகிறார்கள். தோனி தானாக ஓய்வு பெற வேண்டும். இல்லையென்றால் அவரை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. பிசிசிஐ அமைப்பால் தற்போது தோனி கடும் அழுத்தத்தில் இருக்கிறார்.
மாற்றம்
இந்த தொடர் பிரச்சனைகளால் இந்திய அணிக்குள் நிறைய மாற்றங்கள் வரும் நாட்களில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அணியில் பல அதிரடி நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.