என்ன காயம்
கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார். அப்போது தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அந்த ஓவரில் நைல் வீசிய பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது.
என்ன பிரச்சனை
இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் பிசிசிஐ தவானை கண்காணித்துவிட்டு பின்பு முடிவு எடுக்கலாம் என்று கூறி உள்ளது.
முடியவில்லை
இந்த நிலையில் தற்போது காயம் சரியாகாத காரணத்தால் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பிடித்து இருக்கிறார். இதற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்திய அணியில் ஏற்கனவே மூன்று விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நேரத்தில் பண்ட் ஏன் அணிக்குள் எடுக்கப்பட்டார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.
ஏன் தெரியுமா
தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களே நன்றாக நிலைத்து ஆடுகிறார்கள். ஆனால் கடைசியில் இறங்கும் மிடில் ஆர்டர் வீரர்கள், தொடக்கத்தில் இருக்கும் ரன் ரேட்டை தொடர்வதற்கு முடியாமல் திணறுகிறார்கள். பாகிஸ்தான் போட்டியில் கூட விஜய் சங்கர் அதிகமாக திணறி, 350+ ரன்கள் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இந்திய அணி 6 அல்லது 7 வது இடத்தில் இறங்க நல்ல ஹிட்டரை தேடி வந்தது.
செம
இதனால்தான் அணிக்குள் பண்ட் வந்திருக்கிறார். பண்ட் இந்திய அணியில் 6 அல்லது 7 இடத்தில் இறங்கினால் இந்திய அணியின் ரன் ரேட் நன்றாக இருக்கும். கடைசி நேரத்தில் வந்து இவர் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாண்டியா, தோனி, பண்ட் என்று வரிசையாக இறங்கினால், எந்த எதிரணியாக இருந்தாலும் திணறித்தான் போகும் என்கிறார்கள்.
ஓய்வு
அதேபோல் தோனி மட்டும்தான் இந்திய அணியில் ஓய்வே இல்லாமல் முழு போட்டியும் விளையாடி வருகிறார். இதனால் தோனி ஓய்வு எடுத்து, பண்ட் அவ்வப்போது கீப்பிங் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ராகுலை விட இவர் சிறந்த கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எதிர்காலத்தில் இந்திய அணியின் நிரந்தர கீப்பராக இவர் மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இப்படி பல விஷயங்களை மனதில் வைத்தே இவரை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.