டப்ளின்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 16 அணிகள் ஆட உள்ளன. தகுதிசுற்று போட்டியில் ஓமன் மற்றும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று விட்டது. டெஸ்ட் ஆடும் பத்து நாடுகளை தவிர 6 அணிகள் தகுதி சுற்றின் மூலம் உள்ளே வந்தவை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற 10 நாடுகள் நேரடியாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
பிற அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பிளே-ஆப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை தோற்கடித்து தொடர்ந்து 4வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு பிளே-ஆப் சுற்றில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக பங்கேற்பதை உறுதி செய்தது. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அந்தஸ்து ஓமனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. டெஸ்ட் ஆடும் பத்து அணிகளை தவிர, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஹாங்காங், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் களம் காண உள்ளன.